Ad Widget

முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான 3 ஆவது விசேட மருத்துவ முகாம் யாழில்

யாழ் போதனா வைத்தியசாலையில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான 3 ஆவது விசேட மருத்துவ முகாம் அனைத்துலக மருத்துவ சுகாதார நலச்சங்கத்தின் அனுசரணையுடன் போதனா வைத்தியசாலை கிளினிக் பகுதியில் 01.01.2017அன்று நடைபெற்றது.

இம் மருத்துவ முகாமில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டதால் இடுப்பு மற்றும் நெஞ்சுப் பகுதிக்குக் கீழ் செயலிழந்தவர்கள் பயன்பெற்றனர்.

யுத்தத்தினாலும் விபத்துக்களினாலும் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களது அன்றாட தேவைகளுக்குரிய டெற்ரோல், ஓடிக்கலோன், லைபோய்சோப் , செவ்எக்சல் முதலான பொருள்கள் அடங்கிய பொதிகளும் வழங்கப்பட்டது.இதற்கான அனுசரணையை அனைத்துலக மருத்துவ சுகாதார நலச்சங்கம் வழங்கி உதவியது.

யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய நிபுணர் த.சத்தியமூர்த்தி அவர்களின் நெறிப்படுத்தலில் விசேட வைத்திய நிபுணர்களான Dr.M.அரவிந்தன், உணர்வழியியில் சிகிச்சை நிபுணர் Dr.S.பிறேமகிருஸ்ணா மற்றும் சத்திர சிகிச்சைநிபுணர் Dr.T.சர்மா ஆகியோரது வழிகாட்டலில் ஏனைய துறைசார் வைத்தியர்கள் இம் மருத்துவ முகாமிற்கு உதவினர்.

இதன்போது குருதி மற்றும் சலப் பரிசோதனைகள் செய்யப்பட்டதுடன் சிகிச்சையும் வழங்கப்பட்டது. மேலும் விசேட துறைசார் வைத்திய நிபுணர்களது ஆலோசனைக்காக மேலதிக பரிசோதனைகளுக்கான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டது.

இம் மருத்துவ முகாமில் அனைத்துலக மருத்துவ சுகாதார நலச்சங்கத்தின் அமெரிக்க மற்றும் இலங்கைகக் கிளையின் பொருளாளர் திரு. முரளி இராமலிங்கம் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.

Related Posts