சமூக சேவைகள் அமைச்சின் முதியோர்களுக்கான தேசிய செயலகத்தால், இலங்கையிலுள்ள முதியோர்களுக்கு குறைந்த கட்டணத்தில் வெளிநாட்டு சுற்றுலா ஓழுங்குகளை மேற்கொள்ளவுள்ளதாக செயலகத்தின் பணிப்பாளர் சுவிந்த எஸ்.சிங்கப்புலி, செவ்வாய்க்கிழமை (02) தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வழமையான சுற்றுலா கட்டணங்களைவிட குறைந்த கட்டணத்தில் முதியோர்கள் அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.
முதியோர்களின் ஆன்ம ஈடேற்றத்திற்காக உலகின் மிகமுக்கியமான சமய வழிபாட்டுத் தலங்கள், வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் ஆகியவற்றிற்கு இந்தச் சுற்றுலாவின் போது முதியோர்கள் அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.
அதற்கமைய இவ்வருடம் ஒக்டோபர் மாதத்திலிருந்து இந்தியாவிற்கான சுற்றுலா ஆரம்பிக்கப்படவுள்ளது.
தொடர்ந்து, அடுத்த வருடம் முதல் ஜெருசலேம், ரோம், தாய்லாந்து, வியட்நாம், திபெத், ஜப்பான், பூட்டான், இந்தோனேசியா, கொரியா, சிங்கப்பூர், மலேசியா, எகிப்து. கம்போடியா ஆகிய நாடுகளுக்கும் முதியோர்கள் அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.
இந்த வேலைத்திட்டம் தொடர்பில் அக்கறையுடனும் பொறுப்புடனும் செயற்படும் சமூக சேவைகள் அமைச்சின் உத்தியோகத்தர்கள், இலவசமாக போக்குவரத்து ஒழுங்குகள் செய்து அழைத்துச் செல்லப்படுவார்கள் என அவர் மேலும் கூறினார்.