Ad Widget

முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு அடையாள அட்டை !

auto2முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு அடையாள அட்டை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக யாழ்.மாவட்ட முச்சக்கரவண்டி சங்க தலைவர் இராஜ்குமார் நேற்று தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ். மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 618 முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு அடையாள அட்டை வழங்குவதற்கான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அடையாள அட்டைகள் வழங்கப்படும் சந்தரப்பத்தில், குற்றச்செயல்களில் ஈடுபடும் முச்சக்கரவண்டி சாரதிகளை இலகுவாக இனங்காண முடியும். இதனூடாக அவர்களுக்கான தண்டனைகள் வழங்குவதற்கு முடியும்.

இதேவேளை, யாழ். மாவட்டத்தில் பதிவு செய்யப்படாத முச்சக்கர வண்டிகள் சேவையில் ஈடுபடுகின்றதால், அவர்கள் குற்றம் செய்தால் கூட குற்றவாளிகளை இணங்காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அவற்றினை தவிர்க்கும் முகமாகவே, அடையாள அட்டைகள் வழங்குவதற்கான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, இவ்விடயங்கள் தொடர்பான கூட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை யாழ். மாவட்ட முச்சக்கரவண்டி சங்கத்தில் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தின் போது பல தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளன என அவர் மேலும் கூறினார்.

Related Posts