Ad Widget

மீண்டும் யுத்தம் ஏற்படாமல் இருக்க இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் – ஆளுநர்

வடமாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவினால் வெற்றிடங்களை நிரப்புவத்காக நடாத்தப்பட்ட போட்டிப்பரீட்சையில் தோற்றி தெரிவானவர்களுக்கான நியமனக்கடிதங்களை வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே நேற்று (17.09.2018) காலை வழங்கி வைத்துள்ளார்.

நிர்வாக பிரதிப்பிரதம செயலாளர் திருமதி சரஸ்வதி மேகநாதன் தலைமயில் யாழ் நூலக கேட்போர் கூடத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இதில் ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன முதலமைச்சர் அமைச்சின் செயலாளர் திருமதி விஜயலட்சுமி கேதீஸ்வரன், சமூக சேவைகள் அமைச்சின் செயலாளர் திருமதி ரூபினி வரதலிங்கம், பொதுச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் திரு.அ.சிவபாதசுந்தரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

73 பயிலுனர் அபிவிருத்தி உத்தியோகத்தகள், 42 சாரதிகள் 19 கைதடி முதியோர் இல்ல பராமரிப்பாளர்கள் நியமனங்களை பெற்றுக்கொண்டனர்.

இங்கு உரையாற்றிய ஆளுநர் :-

அரசாங்க வேலை செய்வோருக்கு வழங்கப்படும் ஊதியம் துன்பப்பட்ட மக்களின் வரிப்பணத்திலேயே வழங்கப்படுகின்றது. அது எனது பணமோ செயலாளர்களின் பணமோ அல்லது அரசியல்வாதிகளின் பணமோ கிடையாது. மக்களின் பணத்தில் சம்பளம் வேண்டும் எமக்கு ஒரு கடமை இருக்கின்றது. அதுதான் அவர்களுக்கு சிறந்த சேவையினை வழங்குவது. இவ்வாறு தெரிவித்துள்ளார் வட மாகாண ஆளுநர் றெஜினோல் குரே.

யாழ் நூலக கேட்போர் கூடத்தில் நேற்று (17) நடைபெற்ற நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அரசாங்க சேவையில் இணைந்து கொள்ளும் அனைவரும் நாட்டின் அபிவிருத்திக்காக மக்களின் அபிவிருத்திக்காக நேர்மையான உண்மையான சேவையினை பாகுபாடு இன்றி செய்ய வேண்டும் என நான் உங்களிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.

மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால் வடமாகாண இளைஞர் யுவதிகளுக்கு பொருத்தமான வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பது அவசியமானது. வடமாகாணத்தில் அரசாங்க வேலைகளில் அமர்த்துவதற்கு பொருத்தமானவர்களை தெரிவு செய்வது மிகவும் கடினமானது. அதற்கு காரணம் யுத்தம் நடைபெற்ற காலத்தில் படித்த பல இளைஞர் யுவதிகள் அரசாங்க வேலைகளில் உள்வாங்கப்படும்போது தமது சான்றிதமிழ்களை தகுதிகளை உறுதிப்படுத்துவதில் பாரிய சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். யுத்தம் காரணமாக அவர்களின் கல்வி நடவடிக்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றது.

யுத்த காலத்திலே பாடசாலைகளிலும் வைத்தியசாலைகளிலும் பலர் ஊதியம் இல்லாது தொண்டர்களாக கடமை செய்திருக்கின்றார்கள். அவர்களுக்கு கட்டாயம் நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட வேண்டும். அவ்வாறு சேவை செய்தவர்களுக்கு நியமனம் வழங்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்து இரண்டு முறை நியமனங்களை வழங்கியது. ஆனால் மீண்டும் பலர் வருகின்றார்கள் நாங்களும் தொண்டர் ஆசிரியர்கள் என்று. எங்கிருந்து வருகின்றார்கள் எப்படி வருகின்றார்கள் என்பது யாருக்கும் புரியாத விடயமாக இருக்கின்றது.

சேவை செய்தவர்களுக்கு வழங்குவதற்காக மத்திய அரசு அனுமதி வழங்கியபோதும். உண்மையாக பிரச்சனையான காலங்களில் சேவை செய்தவர்களுக்கு நியமனம் வழங்காது இங்கே நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் சிபார்சின் அடிப்படையில் வழங்கப்பட்டிருப்பதாக வருபவர்கள் கூறுகின்றார்கள். அதனால் இந்தப்பிரச்சினை திரும்ப திரும்ப வருகின்றது. தவறு எங்கே நடைபெறுகின்றது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

வடமாகாணத்தில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புதவற்கு அதிகாரிகள் முழு முயற்சி எடுத்துவருகின்றார்கள். அதற்கான அனுமதியினை வழங்குவது எனது கடமை அதனை முழுமையாக நான் செய்ய தயாராக இருக்கின்றேன் என்று தெரிவித்தார்.

Related Posts