வடக்கு மாகாண ஆளுநரால் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் வைத்து நேற்று புதன்கிழமை பல்வேறு உதவித் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன.
இதன்படி வடமாகாண ஆளுநர் நிதியத்தில் இருந்து வடமாகாணத்தைச் சேர்ந்த இருபது நோயாளிகளுக்கு பத்து லட்சம் ரூபா நிதி உதவி வழங்கும் செயற்பாடு மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் வட மாகாண ஆளுநர் தலைமையில் மதியம் இடம்பெற்றது.
மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி வவுனியா முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 20 நோயாளர்கள் குறிப்பாக இருதய நோயாளர்கள் உள்ளடங்கலாக இந்த நிதி உதவியைப் பெற்றுக் கொண்டார்கள்.
அத்துடன் வறுமைக்கோட்டுக்குட்பட்ட குடும்பங்களுக்கான கூரைத்தகடுகள், ஆலய சுற்றாடலில் மீளக்குடியேறிய குடும்பங்களுக்கு நுளம்பு வலைகள் மற்றும் லாந்தர் விளக்குகள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
தெல்லிப்பழை யூனியன் கல்லூரி, தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி ஆகியனவற்றுக்கு ஒரு தொகுதி ஆங்கில நூல்களும் ஆளுநரால் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வில் ஆளுநர் ஜீ.எ.சந்திரஸ்ரீ, ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன், உதவிச்செயலாளர் சி.அண்ணாத்துரை, மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய குருக்கள், வலி வடக்கு பிரதேச செயலாளர் எஸ்.ஸ்ரீமோகனன், ஆலய திருப்பணிச் சபை உறுப்பினர்கள் உட்பட மற்றும் பலர் கலந்துகொண்டனர்.