சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸை விரைவில் சந்திக்க எதிர்பார்ப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.கூட்டமைப்பின் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் இதனை தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸடக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நடைபெறவிருந்தது.
எனினும் இறுதி நேரத்தில் அது பிற்போடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் மீண்டும் அந்த பேச்சுவார்த்தைகளை நடத்த முயற்சிக்கப்படுகின்ற போதும், அதற்கான திகதியை இன்னும் தீர்மானிக்கவில்லை என்று சுரேஷ் பிரேமசந்திரன் கூறியுள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பான இணக்கப்பாடு ஒன்றை ஏற்படுத்திக் கொள்வதற்காக, இந்த பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
அதேநேரம் தமிழ் தேசிய கூட்டமைப்பை சக்திமயப்படுத்தும் நோக்கில் மலையக தமிழ் அரசியல் பிரதிநிதிகளுடனும் சந்திப்புகள் நடத்தப்படும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
அண்மையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்தியா சென்றிருந்த போதும், அனைத்து தமிழ் தரப்புக்களுடனும் இணைந்து கூட்டமைப்பை வலுப்படுத்துமாறு இந்திய பிரதமர் நரேந்திரமோடி வலியுறுத்தி இருந்தார்.
இதன்அடிப்படையில் தொடர்ச்சியான சந்திப்புகளை நடத்தவிருப்பதாகவும், அதன் ஒரு கட்டமாக மலையக மக்களை பிரதிநிதித்துவப் படுத்துகின்ற கட்சிகளுடனும் சந்திப்புகள் நடைபெறும் என்று அவர் கூறியுள்ளார்.