முல்லைத்தீவு மாவட்டத்தில் மரண விசாரணை அதிகாரிகளைத் தேடி அலையவேண்டிய நிலை தங்களுக்கு ஏற்பட்டுள்ளதாக, பாதிக்கப்பட்ட மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள 6 பிரதேச செயலகப் பிரிவுகளிலும், 41,855 குடும்பங்களைச் சேர்ந்த 1,33,152 பேர் மீள்குடியேறி 7 வருடங்கள் கடந்துள்ள நிலையில், அரச நிர்வாக கட்டமைப்புக்கள் அனைத்தும் சரியான முறையில் இயங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், மரண விசாரணை செய்வதற்கான மரண விசாரணை அதிகாரிகளை, தேடி அலையவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தில், மரண விசாரணை செய்வதற்கான ஒன்பது அதிகாரிகள் பிரிவுகளில், மூன்று பிரிவுகளில் மட்டுமே அதிகாரிகள் உள்ளனர்.
இதில் துணுக்காய், மாந்தை கிழக்கு, மரிக்காரம் பற்று (முல்லைத்தீவு), கருநாவல்பற்று தெற்கு (மாங்குளம்), முள்ளியவளை, வெலி ஓயா ஆகிய ஆறு மரண விசாரணை அதிகாரி பிரிவுகளுக்கு மரண விசாரணை அதிகாரிகள் இல்லாத நிலை காணப்படுகிறது.
தற்போது, கரிக்கட்டுமூலை தெற்கு (குமிழமுனை) புதுக்குடியிருப்பு, மேல்பற்று வடக்கு (ஒட்டுசுட்டான்) ஆகிய மூன்று பிரிவுகளுக்கு மட்டுமே மரண விசாரணை அதிகாரிகள் உள்ளனர். இதில், மேல்பற்று வடக்கு (ஒட்டுசுட்டான்) பிரிவு மரண விசாரணை அதிகாரி, 68 வயதைக் கடந்துள்ள நிலையில் தனது முதுமை நிலையிலும் சேவையாற்றி வருகின்றார்.
இவரது இடத்துக்கும் புதியதோர் மரண விசாரணை அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது. குறிப்பாக துணுக்காய், மாந்தை கிழக்கு ஆகிய நீண்ட தூரங்களை உடைய பிரதேச செயலகங்களில், மரண விசாரணை அதிகாரி இல்லாமையால், தாம் பெரும் அவலநிலைக்கு உள்ளாவதாக குறித்த பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.