Ad Widget

மதுபான விடுதி கொலை – முதன்மை சந்தேகநபர் சரண்!

பருத்தித்துறை வீதி வல்லையிலுள்ள மதுபான விடுதியில் இளைஞன் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸாரினால் முதன்மை சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலையுடன் தொடர்புடைய நால்வரில் மூவர் ஏற்கனவே நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் சுமார் 24 நாள்களின் பின்னர் முதன்மை சந்தேக நபர் தனது சட்டத்தரணி ஊடாக நேற்றையதினம் பருத்தித்துறை நீதிமன்றில் சரண்டைந்துள்ளார்.

கடந்த மே 2ஆம் திகதி இரவு விடுதியில் மதுபானம் அருந்திய இரண்டு குழுவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் போத்தலினால் குத்தப்பட்டு உயிரிழந்தார்.

சம்பவத்தில் திக்கம் நாச்சிமார் கோவிலடியைச் சேர்ந்த ஞானசேகரம் குணசோதி (வயது- 25) என்பவரே கொலை செய்யப்பட்டார்.

சம்பவத்தையடுத்து போத்தலினால் குத்தியவர் உள்ளிட்ட நால்வர் தலைமறைவாகிய நிலையில் நெல்லியடிப் பொலிஸார் தேடி வந்தனர்.

அவர்களில் அல்வாய் கிழக்கைச் சேர்ந்த 25 வயதுடைய சந்தேக நபர் வீட்டில் வைத்து இரண்டு தினங்களின் பின்னர் கைது செய்யப்பட்டார்.

குடத்தனை மேற்கைச் சேர்ந்த 31 வயதுடைய சந்தேக நபர் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் சரண்டைந்தார். மற்றையவரும் சில தினங்களின் பின்னர் சரணடைந்தார்.

சந்தேக நபர்கள் மூவரும் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் முதன்மை சந்தேக நபர் 24 நாள்களின் பின்னர் தனது சட்டத்தரணி ஊடாக பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் நேற்று சரண்டைந்தார்.

சரண்டைந்த சந்தேக நபர் கத்தியால் குத்தியதாக வாக்குமூலங்கள் மற்றும் சிசிரிவி காட்சி உள்ளதனால் பொலிஸ் தடுப்பில் வைத்து விசாரிக்க நெல்லியடி பொலிஸார் மன்றில் விண்ணப்பம் செய்தனர்.

பொலிஸாரின் விண்ணப்பத்துக்கு ஆட்சேபனையை முன்வைத்து மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா, நீண்ட சமர்ப்பணத்தை செய்தார்.

இரு தரப்பு சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த பருத்தித்துறை நீதிமன்ற நீதிவான், பொலிஸாரின் விண்ணப்பத்தை நிராகரித்து சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதுடன் அடையாள அணிவகுப்புக்கும் கட்டளையிட்டார்.

Related Posts