எனது கணவர் மகேஸ்வரனை புலிகள் சுட்டதாகக் கூறும் நீங்கள் அப்போது பக்கத்தில் இருந்தீர்களா என்று அமைச்சர் ரோஹித அபே குணவர்தனவிடம் கேள்வி எழுப்பினார் ஐ.தே.கவின் விஜயகலா மகேஸ்வரன் எம்.பி.
இதே சமயம், நடராஜா ரவிராஜ், மகேஸ்வரன் ஆகியோரை புலிகள் கொன்றனர் எனக் கூறுவது அப்பட்டமான பொய் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர் ரோஹித அபே குணவர்தன, மகேஸ்வரனை புலிகள் சுட்டனர் எனக் கூறினார்.
இதன்போது என் கணவரான மகேஸ்வரனை புலிகள் சுட்டனர் எனக் கூறும் நீங்கள் அப்போது பக்கத்தில் இருந்தீர்களா? என்று விஜயகலா மகேஸ்வரன் கேள்வி எழுப்பினார்.
இதன்போது அமைச்சர் ரோஹிதவுக்கும் விஜயகலாவுக்கும் இடையில் தர்க்கம் ஏற்பட்டது. இதையடுத்து, கூட்டமைப்பின் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. விஜயகலாவுக்கு ஆதரவாகக் குரல்கொடுத்தார். நடராஜா ரவிராஜ், மகேஸ்வரன் ஆகியோரை புலி கொன்றனர் எனக் கூறுவது அப்பட்டமான பொய் என்று கூறினார்.
இதையடுத்து கருத்து வெளியிட்ட அமைச்சர் ரோஹித, “அவர்கள் இந்த நாட்டில் இருந்த பயங்கரவாதம் காரணமாகவே கொல்லப்பட்டனர்” – என்றார்.