Ad Widget

போலி ஏ.டி.எம். அட்டைகள் மூலம் பாரிய மோசடியில் ஈடுபட்ட இலங்கையர் கைது

தானியங்கி பணம் வழங்கும் இயந்திரத்தின் (ATM) போலி அட்டைகளைப் பயன்படுத்தி பல நாடுகளில் பணத்தினை கொள்ளையிட்ட இலங்கையர் ஒருவரை தமிழகத்தின் காரைக்குடி பொலிசார் கைதுசெய்துள்ளனர்.

அவரிடமிருந்து 26 இலட்சம் இந்திய ரூபாய்கள், 25 பவுன் நகை, 48 தானியங்கி பணம் வழங்கும் இயந்திர அட்டைகள், போதை பொருட்கள் என்பன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

காரைக்குடி கழனிவாசலை சேர்ந்த பாலுவிடம் சில தினங்களுக்கு தொலைபேசியில் பேசிய மர்மநபர், ´´உங்களுக்கு லோன் வழங்க வேண்டும், ஏ.டி.எம்., பின் நம்பரைக் கூறுங்கள்´´ என்று கேட்டுள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த பாலு காரைக்குடி வடக்கு பொலிசில் புகார் செய்தார். இதனையடுத்து பொலிஸார் குறித்த தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி, சோதனை செய்ததில், காரைக்குடி நுாறடி ரோட்டில் உள்ள லாட்னில் 30 நாட்களாக ஒருவர் தங்கியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

அவரது அறையில் சோதனை செய்ததில், தங்கியிருந்தவர், லண்டன் பிரஜையான இலங்கையை சேர்ந்த விமலன் (36) என்பது தெரியவந்தது.

அவரை கைது செய்த பொலிசார், அவரிடமிருந்து 26 இலட்சம் இந்திய ரூபாய், 25 பவுன் நகை, இரண்டு மடிக் கனணிகள், 48 தானியங்கி பணம் வழங்கும் இயந்திரத்தின் அட்டைகள், பணம் பெறும் பாயிண்ட் ஆப் சேல் கருவி, அரைகிலோ போதை பவுடர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இது பற்றி பொலிசார் கூறியதாவது,

விமலன் காரைக்குடி உதயம் நகரைச் சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளார். இவர் இந்த மோசடியில் பல ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளார். இவருக்கு வெளிநாட்டில் உள்ள வங்கி வாடிக்கையாளர்களின் சேமிப்பு கணக்கு விபரங்கள், ஹேக்கர் செய்து ‛இமெயிலில்´ அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் போலி ஏ.டி.எம்., கார்டுகளை தயார் செய்துள்ளார்.

அதை பயன்படுத்தி காரைக்குடி, தமிழகத்தின் பல பகுதிகளில் பணத்தை எடுத்து வெளிநாடுகளில் உள்ள தனது கூட்டாளிகளுக்கு அனுப்பியுள்ளார். அவர்கள் அமெரிக்கா, ஜப்பான், சீனா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் 40 கோடி இந்திய ரூபாய் வரை மோசடி செய்துள்ளனர்.

இதற்காக அவருக்கு 20 முதல் 30 சதவீதம் பங்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த பணத்தில் சென்னையில் ரூ.60 இலட்சத்தில் வீடு வாங்கியுள்ளார். காரைக்குடியில் ரூ.40 இலட்சத்துக்கு வீடு வாங்க ஏற்பாடு செய்து வந்துள்ளார், என்றனர்.

Related Posts