Ad Widget

போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூர தடை விதிப்பதை கண்டிக்கிறது கூட்டமைப்பு

SURESHஇலங்கையில் விடுதலைப் புலிகளை நினைவுகூரும் வகையில் எந்தவொரு நிகழ்வையும் நடத்தக்கூடாது என இராணுவம் கூறியுள்ளதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டித்துள்ளது.

இது மிகவும் மோசமான ஒரு மனித உரிமை மீறல் என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

உள்நாட்டுப் போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்வதற்கு அனுமதி மறுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது, காண்டுமிராண்டித்தனமானது என்றும் அவர் கூறினார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவடைந்து ஐந்து ஆண்டுகள் ஆகும் வேளையில், அவர்களை நினைவுகூர்ந்து பொது நிகழ்ச்சிகள் ஏதும் நடத்துவதற்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது.

எனினும் அரசின் வெற்றியை கொண்டாடும் வகையில் தென்னிலங்கையில் பெரும் விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன என்பதை சுட்டிக்காட்டிய அவர், தமிழ் மக்கள் மட்டும் தமது உறவுகளுக்கு அஞ்சலி செய்ய தடை விதிப்பது எந்த வகையில் நியாயம் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தனியாக வீடுகளில் நினைவஞ்சலி சடங்குகளை மேற்கொள்வதற்கு அனுமதிப்பதாக இலங்கை அரசும் இராணுவமும் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்தார்.

“இறுதி யுத்தத்தின்போது கூட்டம் கூட்டமாக மக்கள் கொல்லப்பட்டார்கள், அப்படியிருக்கையில் கூட்டமாக அவர்களுக்கு அஞ்சலி செய்ய முடியாது எனக் கூறுவது சரியல்ல. தேவையில்லாத அடக்குமுறையை இலங்கை இராணுவம் கைகொள்வதாகவே தமிழ் மக்கள் இந்த நடவடிக்கைகைக் காண்கிறார்கள்” – என்றார் சுரேஷ் பிரேமச்சந்திரன்.

Related Posts