Ad Widget

போரின் பின் வடக்கில் விகாரை எதுவும் அமைக்கவில்லை! தவறாயின் கூட்டமைப்பு நிரூபிக்கட்டும்! எல்லாவெல தேரர்

NAGa-vegaraiபோருக்குப் பின்னர் வடபகுதியில் புதிதாக ஒரு விகாரையேனும் அமைக்கப்படவில்லை. இதனை நான் பொறுப்புடனேயே கூறுகின்றேன். எனது கூற்று தவறாயின், இதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உரிய ஆதாரத்துடன் நிரூபித்துக் காட்டவேண்டும். மாறாக, வீரவசனம் பேசுவதில் பயனில்லை. இவ்வாறு ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் எல்லாவல மேதானந்த தேரர் சவால் விடுத்துள்ளார்.

சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் எல்லாவல மேதானந்த தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடா்பாக அவா் மேலும் தெரிவித்திருப்பதாவது

தமிழ் மக்களுக்கு நாட்டில் எவ்வித பிரச்சினையும் இல்லை. அவர்கள் சுதந்திரமாகவே வாழ்கின்றனர். அத்துடன், நாட்டைக் கட்டியெழுப்புவதற்குத் தமிழர்களின் ஒத்துழைப்பு தான் தற்போது அவசியம்.

இந்த நாட்டில் தமிழர்களுக்கு ஏதாவது பிரச்சினை இருந்தால் அவற்றில் ஒன்றையாவது கூறட்டும்.

தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களுக்கு பிரச்சினைகள் உள்ளன என்று போலிக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

கோயில்களை இடித்து விகாரைகள் கட்டப்படுகின்றன என்றும் அவர்கள் கூறுகின்றனர். இந்த விடயத்தைக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்றில் சுட்டிக்காட்டுகையில் நான் மறுத்துரைத்து கருத்துத் தெரிவித்தேன்.

போருக்குப் பின்னர் வடக்கிலோ, கிழக்கிலோ புதிதாக விகாரைகள் அமைக்கப்படவில்லை. நான் அப்பகுதிகளுக்கு அடிக்கடி பயணம் செய்கிறேன். அப்படியொன்றும் அங்கு நடக்கவில்லை என்பதை பொறுப்புடன் கூறிக்கொள்கின்றேன். முடிந்தால், கூட்டமைப்பு உரிய ஆதாரத்துடன் நிரூபித்துக் காட்டட்டும்.

வடக்கில் நிலை கொண்டுள்ள இராணுவம் தமிழ் மக்களுக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றதே தவிர, இடையூறுகளை ஏற்படுத்தவில்லை. இதை நான் நேரில் பார்வையிட்டுள்ளேன். வடக்கில் மட்டுமல்ல, ஏனைய பகுதிகளிலும் இராணுவம் இருக்கின்றது என்பதையும் சுட்டிக்காட்டுகின்றேன்.

எமது ஜாதிக ஹெல உறுமய என்பது புலிகளுக்கு எதிரான கட்சி. எமது தமிழ்ச் சகோதரர்களுக்கு நாம் ஒருபோதும் துரோகமிழைத்ததில்லை. இது வரை நாம் தமிழர்களுக்கு எதிராக எந்தவொரு செயற்பாட்டையும் முன்வைக்கவில்லை. சில இனவாத சக்திகளே எம்மை இவ்வாறு சித்திரிக்க முயற்சிக்கின்றன.

நாடாளுமன்ற செயற்பாடுகளை முன்னெடுக்கும் நோக்கமாகவே நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்பட்டது. எனவே, அதற்கும் இதற்கும் முடிச்சுப் போடக்கூடாது. எமது தமிழ்ச் சகோதரர்கள் முன்னைய காலம் போன்று ஒற்றுமையாக வாழவேண்டும். அதுவே எமது எதிர்பார்பபு.

இவ்வாறு எல்லாவெல மேதானந்த தேரர் கூறினார்.

Related Posts