Ad Widget

போதைப்பொருள் வியாபாரத்தின் மையமாக இலங்கை மாற்றப்பட்டுள்ளது – சுரேஸ் பிரேமசந்திரன்

போதைப்பொருள் வியாபாரத்தின் மையமாக இலங்கை மாற்றப்பட்டுள்ளதாக ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இந்தியாவிலிருந்தே போதைப்பொருட்கள் கடத்தப்பட்டு வருவதாகவும், அதனை தடுக்க கடற்படையினரும், பொலிஸாரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “போதைப்பொருள் வியாபாரிகள் மாணவ சமூகத்தை அழிப்பதனை நோக்காக கொண்டே செயற்படுகின்றனர்.

கிளிநொச்சியில் போதைப்பொருள் வியாபாரிகள் பற்றிய தகவல் வழங்கிய மாணவன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாணவர்கள் போதைப்பொருளை தடுக்க முயற்சிகளை முன்னெடுக்கின்றனர். எனவே அவ்வாறான மாணவர்களை பாதுகாக்க பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். கிளிநொச்சி மாணவனை தாக்கியவர்களுக்கு எதிராக விரைவில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்

மேலும், போதைப்பொருள் கடத்தல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு, சிறைச்சாலையிலுள்ள மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு, விரைவில் மரண தண்டனை வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

இவ்வாறான காத்திரமான தீர்மானங்களின் மூலம் போதைப்பொருட்களின் பாவனையை குறைக்க முடியும்“ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts