Ad Widget

பொலிஸாருக்கு மிரட்டல்: நீதிமன்ற வளாகத்துக்குள் வாக்குமூலம்

ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தருக்கு கொலை மிரட்டல் விடுத்தமை தொடர்பில், புங்குடுதீவு மாணவி கொலைச் சந்தேகநபர்கள் ஒன்பது பேரிடம் பொலிஸார், நீதிமன்ற வளாகத்துக்குள் வைத்து வாக்கு மூலம் பதிவு செய்தனர்.

புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கு, நேற்று செவ்வாய்க்கிழமை (15) ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.எம்.எம்.றியால், விசாரணைக்கு முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதன்போது கடந்த ஜனவரி மாதம் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற வாளகத்தினுள் வைத்து ஊடகவியலாளர்கள் முன்னிலையில், தம்மை ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர், பழிவாங்கும் நோக்குடன் பொய் குற்றசாட்டு சுமத்தி கைது செய்துள்ளதாகவும், தாம் வெளியில் வந்த பின்னர் அவரை கண்டால் வெட்டுவோம் எனவும் கொலை மிரட்டல் விடுத்திருந்தனர்.

“அது தொடர்பில் குறித்த வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள ஒன்பது சந்தேகநபர்களிடமும் வாக்கு மூலம் பெற அனுமதிக்க வேண்டும்” என நீதிமன்றில் பொலிஸார் கோரிக்கை விடுத்தனர்.

அதனையடுத்து ஒன்பது சந்தேகநபர்களின் வாக்கு மூலங்களையும், நீதிமன்ற வளாகத்தினுள் வைத்து பதிவு செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டார்.

அதனையடுத்து, பொலிஸ் உத்தியோகத்தருக்கு கொலை மிரட்டல் விடுத்தமை தொடர்பிலான வாக்கு மூலங்களை ஊர்காவற்துறை பொலிஸார், நேற்று செவ்வாய்க்கிழமை (15) பதிவு செய்தனர்.

Related Posts