Ad Widget

பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் இளைஞன் உயிரிழப்பு! பொலிஸார் மீது இனந்தெரியாதோரால் தாக்குதல்!!

வடமராட்சி கிழக்குப் பகுதியில் ஒருவர் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளார். அதையடுத்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.

வல்லிபுரம் ஆலயத்துக்குச் செல்லும் சாலையில் 6 ஆம் கட்டைப் பகுதியில் நேற்றுப் பிற்பகல் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் துன்னாலைச் சேர்ந்த 24 வயதுடைய யோகராசா தினேஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவரது இடுப்புக்கு மேற்பட்ட பகுதியில் சூட்டுக்காயம் காணப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது. உயிரிழந்தவரின் உடல் மந்திகை ஆதார மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

“சட்டவிரோத மணல் கடத்தலைத் தடுக்கும் நோக்கில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. ஹன்ரர் ரக வாகனம் மணலுடன் கைப்பற்றப்பட்டுள்ளது. விசாரணைகள் நடத்தப்படுகின்றன. அதன்பின்னரே முழுமையாக தகவல்களைத் தெரிவிக்க முடியும்.”-என்று பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் 10 நாள்களுக்கு முன்னரே வெளிநாட்டில் இருந்து வந்தார் என்று அவரது உறவினர்கள் தெரிவித்தனர். நேற்று மதியம் உணவு உண்டுவிட்டு யாழ்ப்பாணம் சென்றுவந்து மோட்டார் சைக்கிளை வீட்டில் நிறுத்திய அவர் வல்லிபுரம் கோயிலுக்குச் சென்று வருகின்றேன் என்று கூறிச் சென்றார் என்றும் அவர்கள் தெரிவித்தனர். அவர் மணல் கடத்தலில் ஈடுபடுவதில்லை என்றும் அவர் மீண்டும் வெளிநாடு செல்லவிருந்தார் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பதற்ற நிலைமை ஏற்பட்டது. உயிரிழந்தவரின் உறவினர்கள் மருத்துவமனையில் திரண்டனர். மந்திகை மருத்துவமனைக்கு வந்த பருத்தித்துறைப் பொலிஸாரின் ஜூப் மீது ஆத்திரமடைந்த மக்கள் கற்களால் தாக்குதல் நடத்தினர்.

மந்திகை மருத்துவமனைப் பகுதியில் பதற்றமான நிலைமை ஏற்பட்டதை அடுத்து காங்கோசன் துறை மூத்த பொலிஸ் அத்தியட்சிகர் மகாசிங்க, காங்கேசன்துறை, நெல்லியடி, வல்வெட்டித்துறை, பருத்தித்துறைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் உட்பட 50 பொலிஸாரும் அவர்களுடன் இரு வாகனங்களில் சிறப்பு அதிரடி படையினரும் மந்திகை ஆதார மருத்துவனைக்குச் சென்றனர்.

அதேவேளை, இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்று கருதப்படும் பொலிஸ் உத்தியோத்தர் ஒருவரின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நெல்லியடியில் அமைந்துள்ள அவரது வீட்டின்மீது தாக்குதல் நடத்தியவர்கள் வீட்டிலிருந்த பொருள்களையும் சேதப்படுத்தினர் என்று தெரிவிக்கப்பட்டது. சுமார் 20 பேர் கொண்ட குழுவினர் முகத்தை துணியால் மூடிக் கட்டியவாறு தாக்குதல் நடத்தினர் என்று தெரிவிக்கப்பட்டது.

துன்னாலையில் அமைக்கப்பட்டிருந்த பொலிஸ் காவலரண் ஒன்றும் இனந்தெரியாதோரால் அடித்து நொருக்கப்பட்டது.

Related Posts