Ad Widget

பொருட்களுக்கான விலைக் குறைப்பு சலுகையை வடக்கு மக்களும் அனுபவிக்க ஏற்பாடுகள் தேவை! – டக்ளஸ்

அரசு அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்கும் நிலையில், இதன் பயனை வடக்கு மக்களும் அனுபவிக்கக் கூடிய ஏற்பாடுகள் அவசியம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நிதி அமைச்சருக்கு அறிவித்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், அத்தியாவசியப் பொருட்கள் உட்பட ஏனைய பொருட்களின் விலைகளை அரசுகள் அவ்வப்போது குறைக்கும் பட்சத்தில் வடக்கு மக்களால் இந்த சலுகையை அனுபவிக்க இயலாதுள்ளது.

கடந்த வரவு – செலவுத் திட்டத்தில் 12.5 கிலோ எடை கொண்ட எரிவாயுவின் விலை 1,346 ரூபா என அரசு நிர்ணயித்திருந்தும், யாழ்ப்பாணத்தில் இது 1,500 ரூபாவிற்கே விற்கப்பட்டு வருகிறது. ஏனைய பொருட்களின் விலை நிலவரங்களும் இவ்வாறுதான் இருக்கின்றன. எனவே, அரசின் இவ்வாறான சலுகைகள்கூட எமது மக்களுக்குக் கிடைப்பதில்லை.

பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ள இப்பகுதி மக்கள் விலைச் சலுகையினை அனுவிப்பதிலும் புறக்கணிக்கப்படும் நிலையே தொடர்கின்றது.

இவ்வாறான விடயங்களை அவதானத்தில் கொண்டு, தென் பகுதி மக்கள் அனுபவிக்கும் விலைச் சலுகைகளை வடக்கு மக்களும் சமாந்தரமாக அனுபவிக்கக்கூடிய வகையில் ஒரு பொறிமுறையை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நிதி அமைச்சரை வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts