Ad Widget

பொன்னாலைப் பாலத்தில் விபத்து: பூசகர் பலி!

தனியார் பேருந்து, மோட்டார் சைக்கிள், துவிச்சக்கரவண்டி என்பன ஒன்றை ஒன்று மோதிக் கொண்டதில் பூசகர் ஒருவர் உயிரிழந்தார். துவிச்சக்கர வண்டியில் பயணித்தவர் காயமடைந்தார்.

இந்தச் சம்பவம் பொன்னாலைப் பாலத்தில் நேற்று மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றது.

காரைநகரில் உள்ள ஆலயம் ஒன்றில் பூசையை முடித்து வடலியடைப்பிலுள்ள வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பிக்கொண்டிருந்த பூசகர், கடற்றொழிலுக்குச் சென்றுவிட்டு துவிச்சக்கரவண்டியில் வந்துகொண்டிருந்தவரை முந்திச்செல்ல முற்பட்டார்.

அதனால் நிலைதடுமாறி துவிச்சக்கரவண்டியுடன் விபத்துக்குள்ளாகி யாழ்ப்பாணத்தில் இருந்து காரைநகர் நோக்கிச் சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்துடனும் அவரது மோட்டார் சைக்கிள் மோதியது.

விபத்துக்குள்ளாகிய பூசகர் மோட்டார் சைக்கிளுடன் இழுத்துச் செல்லப்பட்டார். அவரது தலைக்கவசம் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன சேதமடைந்திருந்தன.

துவிச்சரவண்டியில் சென்றவர் கடலுக்குள் பாய்ந்த நிலையில் அவரும் காயமடைந்தார்.

பூசகர் நோயாளர் காவு வண்டியில் ஏற்றி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார். எனினும் அவர் உயிரிழந்துவிட்டார் என மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

விபத்து இடம்பெற்றவேளை சாரதி பேருந்தை நிறுத்துவதற்காக முற்பட்டபோது பாலத்தில் எதிர்த்திசையில் தரித்து விடப்பட்டிருந்த மற்றொரு மோட்டார் சைக்கிளுடனும் பேருந்து மோதியுள்ளது. இதனால் அந்த மோட்டார் சைக்கிளும் சேதமடைந்தது.

மேற்படி விபத்தில் வடலியடைப்பை சேர்ந்த அர்ச்சகரே உயிரிழந்தார். பொன்னாலையைச் சேர்ந்த ரகுநாதன் புஸ்பகாந்தன் (வயது-33) என்பவர் காயமடைந்தார்.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவரும் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Posts