ஐஸ் கிறீமில் மலத்தொற்று என வெளியான செய்திகளிற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகக் கூறிக்கொண்டு நேற்று காலை 10.00 மணியளவில் யாழ். நகரில் கண்டனப்பேரணி ஒன்று இடம்பெற்றுள்ளது.
பொதுவாக வைத்தியசாலை மற்றும் பாடசாலைக்கு முன்பாக வாகனங்களின் ஒலி எழுப்பவது தடைசெய்யப்பட்டுள்ளது. மீறி வாகனத்தில் ஒலி எழுப்புவர்கள் சட்டரீதியாக தண்டிக்கப்படுகின்றனர். ஆனால் நேற்று இடம்பெற்ற கண்டனப்பேரணியில் கலந்து கொண்டவர்கள் மத்திய கல்லூரி, வேம்படி மகளீர் கல்லூரி அருகாமையில் செல்லும் போதும் யாழ் போதனா வைத்தியசாலைக்கு முன்பாகவும் சத்தமாக ஒலிபெருக்கியில் கோஷமிட்டனர்.
மேலும் தேர்தல் காலங்களில் மற்றும் விசேட தினங்களில் காப்பெட் வீதிகளில் பெயர் பொறிப்பவர்களை கைது செய்து பொதுவுடமைக்கு சேதம் விளைவித்ததாக கூறி சட்டத்தால் தண்டிக்கப்படுகின்றனர். ஆனால் நேற்று கஸ்தூரியார் வீதியில் வீதியின் நடுவில் கொடும்பாவியை போட்டு அதன் மீது பத்திரிகைகள், மற்றும் மண்ணெண்ணையை ஊற்றி தீயிட்டு கொளுத்தினர். இதனால் குறித்த வீதி ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.
அண்மையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களிற்கு ஆதராவாக தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் மேற்கொள்ளவிருந்த போராட்டத்திற்கு நகரின் பாதுகாப்பு கருதி யாழ். நகர் பொலிசார் நீதிமன்றத்தில் தடையுத்தரவு பெற்றிருந்தமையால் போராட்டம் நடைபெறவில்லை.
ஆனால் நேற்று சிறு குழுவினர் இவ்வாறான ஒரு போராட்டத்தை முன்னெடுத்து சட்ட ஒழுங்குகளை மீறி வீதியில் நெருப்பினை கொளுத்தி போக்குவரத்து இடையூறு செய்தமையையும் பொலிசார் கண்டு கொள்ளாமைக்கு பொது மக்கள் விசனம் தெரிவித்தனர்.