Ad Widget

பேச்சுவார்த்தைக்கு வருமாறு காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் அரசிடம் பகிரங்க வேண்டுகோள்

எமது பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்துடன் மனந்திறந்து பேச விரும்புகிறோம். எனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் எம்முடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்களின் போராட்டம் இன்றுடன் (சனிக்கிழமை) 69ஆவது றாளை எட்டியுள்ள நிலையில், இன்றைய போராட்டத்தில் கலந்துக்கொண்டிருந்த தாயொருவரே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திய அவர், “வடக்கு- கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட பூரண ஹர்த்தாலின் மூலம் எமக்குள்ள ஆதரவை அரசாங்கத்திற்கு நாம் வெளிப்படுத்தியுள்ளோம்.

இந்த போராட்டமானது, நாட்டிற்கோ, அரசாங்கத்திற்கோ அல்லது அரசியல்வாதிகளுக்கோ எதிரான போராட்டம் அல்ல. எமது இரத்தத்தின் இரத்தமாகிய எமது பிள்ளைகளுக்காகவே நாம் போராடி வருகின்றோம்.
இந்நிலையில், எமது பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் எம்முடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் பகிரங்க வேண்டுகோளை விடுக்க விரும்புகிறோம்.

எமது அரசியல்வாதிகளை நம்பி பிரயோசமனற்ற நிலையில், போராட்டத்தை ஆரம்பித்துள்ள நாம், அரசாங்கத்துடன் பேசி எமது பிரச்சினைகளுக்கு தீர்வு காண விரும்புகிறோம். அவர்களிடம் பேசினால் மாத்திரமே எமக்கு தீர்வு கிடைக்கும்” என்றார்.

Related Posts