ஆவாகுழு உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதை மேற்கோள்காட்டி, புலிகள் அமைப்பு மீள இயங்க ஆரம்பித்துள்ளதா என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பத்ம உதயசாந்த கேள்வியெழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) வாய்மூலவிடைக்கான கேள்வி நேரத்தின் போதே சட்டம் ஒழுங்கு அமைச்சரிடம் மேற்படி கேள்வியை எழுப்பினார். இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“ஆவாகுழுவின் தலைவர் உட்பட ஆறு உறுப்பினர்கள் கொழும்பிலும், யாழ்ப்பாணத்திலும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதன்மூலம் புலிகள் அமைப்பு மீள இயங்க ஆரம்பித்துள்ளது என்பதையே பாதுகாப்பு தரப்பின் தகவல்கள் எடுத்துக்காட்டுகின்றன.
பொலிஸ்மா அதிபரும் இது குறித்து யாழ்ப்பாணத்தில் வைத்து அறிவிப்பொன்றை விடுத்திருந்தார்.
எனவே, புலிகள் அமைப்பு வடக்கில் மீள இயங்க ஆரம்பித்துள்ளனர் என வெளியாகிவரும் தகவல்கள் குறித்து அரசின் பதில் என்ன? பொறுப்புடன் பதிலளிக்கப்படுமா? எனக் கேள்வியெழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.