Ad Widget

புலம்பெயர் தமிழ் மக்களுக்கு விக்னேஸ்வரன் அழைப்பு!!

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்தினை நிறைவேற்றுவதற்கு இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்படக்கூடாது என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

இந்த விடயத்தில் புலம்பெயர் தமிழ் மக்களும் தம்மால் முடிந்தளவுக்கு சர்வதேச அரசியல் மற்றும் இராஜதந்திர மட்டங்களில் எடுத்துரைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்தின் இரண்டு வருடங்கள் நிறைவடையும் நிலையில், எதிர்வரும் 25ஆம் திகதி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் வடக்கு கிழக்கு மாகாணங்கள் தழுவிய அளவில் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெறவுள்ளது.

குறித்த மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, நேற்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் வடக்கு கிழக்கு மாகாணங்களின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கங்கள் ஒன்றிணைந்து நடத்தும் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் பெரும் எண்ணிக்கையில் பொதுமக்கள் கலந்துகொள்ள வேண்டும் என கூறினார்.

இதன்போது இலங்கைக்கு மேலதிக கால அவகாசம் வழங்கக்கூடாது என்று ஏகோபித்த குரலில் ஒலிக்கவேண்டும் என்றும் சர்வதேச சட்டம் மற்றும் கோட்பாடுகளின் அடைப்படையில் மாற்று வழிமுறைகளை ஐ.நா. சபை இலங்கை விடயத்தில் இனிமேல் கையாள வேண்டும் என வலியுறுத்த வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஐ நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானத்தினை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் தவறியுள்ள நிலையிலும் தொடர்ந்தும் வடக்கு கிழக்கில் மனித உரிமை மீறல்கள் நடைபெற்றுவரும் நிலையிலும் அவற்றை கண்காணிப்பதற்கு ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகராலயம் கட்டாயமாக அலுவலகங்களை திறக்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதனை புலம்பெயர் தமிழ் மக்களும் தம்மால் முடிந்தளவுக்கு சர்வதேச அரசியல் மற்றும் ராஜதந்திர மட்டங்களில் எடுத்துரைக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்

Related Posts