ஐரோப்பிய நாடுகளுக்கு இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக புலம்பெயர்ந்து செல்வதை தடுக்கும் நோக்கில், புதிய செயலணியொன்றை நிறுவவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சட்டம் ஒழுங்கு அமைச்சு, மீள்குடியேற்ற அமைச்சு, நீதியமைச்சு மற்றும் குடியகல்வு குடிவரவு திணைக்களத்துடன், ஐரோப்பிய ஆணைக்குழுவையும் தொடர்புபடுத்தி குறித்த செயலணியை அமைக்கவுள்ளதாக பிரதமர் ரணில் மேலும் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி. வரிச்சலுகையை மீளப் பெற்றுக்கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தைக்காக பெல்ஜியம் சென்றுள்ள பிரதமர் ரணில், ஐரோப்பிய பேரவையின் தலைவர் டொனால்ட் டஸ்கை சந்தித்துள்ளார். இதன்போது, சட்டவிரோத புலம்பெயர்வு தொடர்பாக இலங்கை அரசாங்கம் அதிக கவனஞ்செலுத்த வேண்டுமென ஐரோப்பிய பேரவையின் தலைவர் கேட்டுக்கொண்டார். இதற்கு பதிலளிக்கும்போதே குறித்த செயலணியை அமைப்பது தொடர்பில் பிரதமர் விளக்கியுள்ளார்.
அத்தோடு, இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகள் வெற்றியடையும்போது, சட்டவிரோத புலம்பெயர்வு தொடர்பான பிரச்சினை பெரும்பாலும் தீர்க்கப்பட்டு விடும் என்றும் பிரதமர் ரணில் தெரிவித்துள்ளார்.