சுகாதார அமைச்சினால் வடமாகாணத்தில் 92 புதிய தாதியர்கள் நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை, வடமாகாணத்தில் கடமையாற்றிய 46 தாதியர்கள் வெளிமாவட்டங்களுக்கு இடமாற்றம் பெற்றுச் செல்வதாக வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ்.ரவீந்திரன் திங்கட்கிழமை (01) தெரிவித்தார்.
வடமாகாணத்தில் புதிதாக நியமனம் பெற்ற தாதியர்களுக்கான வரவேற்பு நிகழ்வும் நீண்டகாலமாக வடமாகாணத்தில் கடமையாற்றி வெளியிடங்களுக்கு இடமாற்றம் பெற்றுச் செல்லும் தாதியர்களுக்கான பிரிவு உபசார நிகழ்வும் யாழ் பொது நூலக கேட்போர் கூடத்தில் நேற்று திங்கட்கிழமை (01) இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கூறுகையில்,
புதிதாக நியமனம் பெற்றவர்கள், மன்னார், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களின் மாவட்ட வைத்தியசாலைகளுக்கும், பருத்தித்துறை, தெல்லிப்பளை, சாவகச்சேரி ஆகிய ஆதார வைத்தியசாலைகளுக்கும் நியமிக்கப்படவுள்ளனர். இவர்கள் வடமாகாணத்தில் 5 வருடங்கள் தொடர்ந்து கடமையாற்ற வேண்டும் என சுகாதார அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, மாகாண சுகாதார பணிப்பாளர் திருமதி ஜெ. யூட், வடமாகாணப் பிரதம செயலாளர் விஜயலட்சுமி ரமேஸ், யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர்.கேதீஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.