Ad Widget

புடினின் நடவடிக்கைக்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம்!

உக்ரைனின் சில பகுதிகளை சட்டவிரோதமாக இணைக்கும் ரஷ்யாவின் முயற்சிக்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது உக்ரைனில் ஆக்கிரமிக்கப்பட்ட நான்கு பகுதிகளை ரஷ்யா சட்டவிரோதமாக இணைக்க முயற்சித்ததை ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை கண்டித்துள்ளது.

அத்தடன், இந்த நடவடிக்கையை அங்கீகரிக்க வேண்டாம் என்று அனைத்து நாடுகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

193 உறுப்பினர்களைக் கொண்ட பொதுச் சபையில் முக்கால் பகுதியினர் உக்ரைனின் இறையாண்மை, சுதந்திரம், ஒற்றுமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளன.

இதன்படி, தீர்மானத்திற்கு ஆதரவாக 143 நாடுகள் வாக்களித்துள்ளன. சிரியா, நிகரகுவா, வட கொரியா மற்றும் பெலாரஸ் ஆகிய நான்கு நாடுகள் மட்டுமே ரஷ்யாவுடன் இணைந்து தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தன.

ரஷ்யாவின் மூலோபாய பங்காளியான சீனா உட்பட மேலும் 35 நாடுகள் வாக்களிப்பில் இருந்து விலகியதுடன், ஏனைய நாடுகள் வாக்களிக்கவில்லை.

கடந்த வாரம், நான்கு உக்ரேனியப் பகுதிகளை ரஷ்யாவுடன் இணைக்கும் சட்டங்களில் விளாடிமிர் புடின் கையெழுத்திட்டார், சர்வதேசக் குரலை மீறி ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை இணைப்பதை இறுதி செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts