Ad Widget

புங்குடுதீவு மாணவி கொலை: விசாரணைகள் 98% நிறைவு

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு தொடர்பான விசாரணைகள் 98 சதவீதம் நிறைவடைந்துள்ளது என, ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம்.றியால், நேற்று (22) தெரிவித்தார்.

மாணவி, 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி, வன்புணர்வுக்குட்படுத்தி படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரையில் 12 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு, வழக்கு விசாரணைகள் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றன.

குறித்த வழக்கு, ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம்.றியால் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.

இதன்போதே, நீதவான் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சந்தேகநபர்களின் மனைவிமார் மற்றும் உறவினர்கள், குறித்த வழக்கு விசாரணைகளில் இருந்து விலகி இருக்க வேண்டும். விசாரணைகள் நேர்மையாக நடைபெறுகின்றது. 98 சதவீத விசாரணைகள் முடிவடைந்து விட்டன.

இந்த வழக்கு விசாரணைக்கு உதவுகின்றோம் என கூறிக்கொண்டு வருபவர்களிடம் ஏமாற வேண்டாம். அவர்களை நம்பி பணம் நகைகளை கொடுத்து ஏமாறவேண்டாம். இந்த வழக்கு விசாரணை குறித்து ஏதேனும் தெரிவிக்க இருப்பின் குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினரிடமோ அல்லது நீதிமன்றில் முன்னிலையாகி, தமது வாக்கு மூலத்தை தெரிவிக்க முடியுமென நீதவான் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து குறித்த வழக்கு விசாரணைகளை 05ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதவான் அதுவரையில் சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

Related Posts