Ad Widget

பிரபாகரன் படத்தை லைக் செய்த இளைஞர் 10 மாதங்களுக்குப் பின்னர் விடுதலை!

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரனின் படத்துடன் பதிவிடப்பட்ட வாழ்த்துச் செய்தியை லைக், ஷேர் செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைதான தமிழ் இளைஞர் ஒருவரை 10 மாதங்களுக்குப் பிறகு நேற்று (10) புதன்கிழமை கொழும்பு மேல் நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதித்தது.

சர்ச்சைக்குரிய பேஸ்புக் பதிவொன்றை மையப்படுத்தி இரத்தினபுரியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் கைதுசெய்து, சிறையில் அடைத்தனர்.

இந்த ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டு தினத்தில் வாழ்த்துச் செய்தியொன்று பேஸ்புக்கில் பதியப்பட்டுள்ளது. தினேஸ் குமார் என்ற இளைஞனே குறித்த சர்ச்சையான பதிவை பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தப் பதிவை லைக் செய்ததாகவே விதுசன் என்ற இளைஞனும் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

விதுசனுக்கு பிணை வழங்க வேண்டுமெனக் கோரி தாக்கல் செய்த மீளாய்வு மனுவை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பா ஜானகீ ராஜரத்ன நேற்று புதன்கிழமை ஆராய்ந்தார். இறுதியாக விதுசனுக்கு பிணையில் செல்ல அனுமதித்த நீதிபதி, முன்னாள் இராஜாங்க அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனுக்கு ஒரே நாளில் பிணை வழங்க முடியுமெனில், லைக் செய்த இந்த இளைஞனை 10 மாதம் தடுத்துவைத்திருந்தது எவ்வகையில் நியாயம் என நீதிபதி வினவியுள்ளார்.

சர்ச்சைக்குரிய வாழ்த்துச் செய்தியை பதிவிட்ட குற்றச்சாட்டில் கைதான தினேஸ் குமார் என்ற இளைஞருக்கு பிறப்புச் சான்றிதழ், தேசிய அடையாள அட்டை இல்லாத காரணத்தினால் அவருக்கு பிணை பெறுவதில் சிக்கல் இருப்பதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

வாழ்த்துச் செய்தியில் என்ன இருந்தது?

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரனின் படமும், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் இலச்சினையும் அந்தப் பதிவில் இருந்ததாக முறையிடப்பட்டுள்ளது. நண்பர் ஒருவர் பகிர்ந்திருந்த ஒரு பதிவை தனது பேஸ்புக்கில் விதுசன் என்ற இளைஞர்,லைக் செய்து, ஷேர் செய்துள்ளார் என குற்றசம்சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து முன்னதாக இரத்தினபுரி போலீஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. பின்னர் இந்த விவகாரம் தேசிய பயங்கரவாதத் தடுப்புப் பிரிவில் முறையிடப்பட்டுள்ளது.

Related Posts