Ad Widget

பாறையைப் பிளந்து விதை முளைப்பது போல் வெளிவரும் செப்டம்பர் 24 ‘எழுக தமிழ் பேரணி’ வெல்க!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அவர்களின் எழுக தமிழ் நிகழ்விற்கு அனுப்பிவைத்துள்ள
வாழ்த்துச் செய்தி!

14324201_568046203380894_8672557208133970938_o

பாறையைப் பிளந்து கொண்டு விதை முளைப்பது போல், தமிழின ஒடுக்குமுறைகளைப் பிளந்து கொண்டு ‘தமிழ் மக்கள் பேரவை’ உருவாகியிருப்பது, உலகெங்கும் வாழும் தமிழர்களின் நெஞ்சம் குளிரும் செய்தியாகும்.

பல்வேறு அரசியல் இயக்கங்கள் மற்றும் வெகு மக்களை ஒருங்கிணைத்துக் கொண்டு கூட்டுத் தலைமையின் கீழ் உருவாக்கியிருக்கும் ‘தமிழ் மக்கள்பேரவை’க்கு தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் மனம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இலங்கை அரசாங்கத்தின் தமிழர் விரோதப்போக்குகளை ஈழத்தில் வாழும் தமிழ்மக்கள் புரிந்துகொண்டு, ‘தமிழ் மக்கள் பேரவை’யால்முன்னெடுக்கப்படும் எழுக தமிழ் பேரணியில், தமிழ் சொந்தங்கள் பங்கெடுக்க வேண்டியது ஒவ்வொரு தமிழரதும் வரலாற்றுக் கடமையாகும்.

தமிழின அழிப்புப் போர் நடத்திய சிங்களப் படையாட்கள் போர் முடிந்த நிலையில், கடந்த ஏழாண்டுகளாகத் தமிழர்களின் விளை நிலங்களை ஆக்கிரமித்துக்கொண்டும், வீடுகளை வன்கவர்தல் செய்தும் புதிய வகையில் இன அழிப்புப் போரைத் தொடர்கின்றனர். இராசபட்சே ஆட்சியில் நடந்தஅதேசிங்களப்படையின் வன்கவர்தல்களும் ஆக்கிரமிப்புகளும் மைத்திரி – ரணில் ஆட்சியிலும் தொடர்கின்றன.

ஈழத்தின் அதிகரித்த ராணுவ பிரசன்னம் காரணமாக மக்களின் சுதந்திரமான நடமாட்டம் பாதிக்கப்பட்டிருப்பதோடு குடியியல் (சிவில்) நிகழ்வுகளில் இராணுவத்தின் தலைகீடும் நெருக்கடியும் தொடர்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.

மேற்கண்ட இராணுவ ஆக்கிரமிப்புகள் அனைத்தும் விலக்கப்பட்டு தமிழர்களின் பகுதியிலிருந்து இராணுவ முகாம்கள் திரும்பப் பெறப்பட வேண்டும் என்ற தமிழ் மக்கள் பேரவையின் கோரிக்கை உலக அரங்கில் ஏற்கப்பட வேண்டிய மனித உரிமை நீதியாகும்.

வடக்கு கிழக்கு மாகாணங்களை இராணுவமயமாக்கிக் கொண்டுள்ள அதேவேளை அவற்றில் சிங்களக் குடியேற்றங்களைத் திட்டமிட்டுத் திணித்து தமிழர்தாயக அழிப்பு வேலையை சிங்கள அரசு இன்றும் தீவிரப்படுத்தியுள்ளது. தமிழர் தாயகம் என்ற அடிப்படை உரிமையைப் பறிக்கும் வகையில் சிங்களர்களைமைத்திரி ரணில் அரசு குடியேற்றிக் கொண்டுள்ளது.இந்து மற்றும் கிருஸ்தவஇ இசுலாம் மதங்களைச் சேர்ந்த தமிழ் பேசும் மக்களின் தாயகத்தில் சிங்கள பௌத்த கோயில்களைப் புதிது புதிதாக எழுப்பிக்கொண்டுள்ளார்கள். இந்துக் கோயில்களில் புத்தர் சிலைகளை வைக்கிறார்கள். இவ்வாறான தமிழர் ஆன்மிக அழிப்பு நடவடிக்கைகளை மைத்திரி – ரணில்அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்.

போர்க்காலத்தில் நடந்த தமிழினப் படுகொலைக் குற்றங்கள், காணாமல் போன தமிழர்கள் என்ற தலைப்பில் அழிக்கப்பட்ட தமிழர்களின் விவரங்கள் அதற்கான பொறுப்பாளிகள் ஆகியவற்றை விசாரித்துஇ நடந்த உண்மைகளை வெளிக் கொண்டுவர குற்றவாளிகளைத் தண்டிக்கப் பன்னாட்டுப் புலனாய்வுமன்றம் உடனடியாக அமைக்கப்பட வேண்டும். ‘தமிழ் மக்கள் பேரவை’24.09.2016 காரி(சனி)க்கிழமை யாழ்ப்பாணத்தில் நடத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க மாபெரும் ‘எழுக தமிழ்’ பேரணி, தமிழர் அரசியல்செயல்பாட்டில் புதுக்குருதி பாய்ச்சும் என்று உறுதியாக நம்புகிறோம்.

இப்படிப்பட்ட வடிவிலான மக்கள் அமைப்பும், மக்கள் திரள் போராட்டங்களும்தான் தமிழர்களுக்கான உண்மையான உறுதியான அரசியல் தலைமையைஉருவாக்கும். தற்சமயம் தமிழீழத்தில் சிங்கள ஆட்சியாளர்களின் அரவணைப்பில் வலம் வந்து கொண்டிருக்கும் கங்காணித் தலைமைகளைப் புறந்தள்ளும்.

கூட்டுத் தலைமையில் சனநாயக உள்ளடக்கத்தோடும் சமூகப் பன்மைகளை ஏற்கும் உளவியலோடும் உருவாக்கப்பட்டுள்ள ‘தமிழ் மக்கள் பேரவை’யின்பேரணியில், பல இலட்சம் தமிழ் மக்கள் கலந்து கொண்டு உலகத்தின் கவனத்தை ஈர்க்க வேண்டும். உலகம் வியக்கும் போர்த்திறன் காட்டிய தமிழ் மக்கள், ஆயுதமற்ற அரசியல் திறன் காட்டி சாதனை செய்வார்கள் என்ற நம்பிக்கை எமக்கிருக்கிறது.

இன்னணம்,
பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்.
சென்னை

Related Posts