பாதிக்கப்பட்டவர்களுக்கு கண்டிப்பாக நீதி கிடைக்கும்: இலங்கை அரசு உறுதி

மனிதஉரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதில் இலங்கை அரசாங்கம் உறுதியாகவிருப்பதாக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத்தொடரின் 34வது அமர்வில் இன்று உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கருத்து கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“1948ம் ஆண்டு சுதந்திரத்தினைப் பெறுவதற்கு நாம் ஜாதி, மத, இன பேதங்களின்றி ஒன்றாக போராடி வெற்றி பெற்றோம். ஆனால் கடந்த காலங்களில் அனைத்து மக்களையும் சமமாக அரவணைத்துச் சென்று நாட்டைக் கட்டியெழுப்பத் தவறியமையால் கடந்த 69 வருடங்கள் வலிகளையும் வன்முறைகளையும் சந்தித்திருந்தோம். விலைமதிப்பற்ற மனித வளங்கள் மற்றும் சொத்துக்களையும் இழந்திருந்தோம். அந்த சகாப்தத்தினை நிறைவுக்கு கொண்டுவந்து, இலங்கையில் நீதியான ஆட்சியைக் கட்டியெழுப்ப கோருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், 2016ம் ஆண்டு கூட்டத் தொடரில் கூறியதைப் போன்று, சுமார் 5,515.98 ஏக்கர் அரச காணிகள் மற்றும் 2,090.03 ஏக்கர் தனியார் காணிகள் 2016ம் ஆண்டில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், 1,383.51 அரச காணிகள் மற்றும் 30.54 ஏக்கர் தனியார் காணிகள் கடந்த மாதம் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், தற்போது நல்லிணக்க வழிமுறைகள் பற்றிய கலந்தாய்வுச் செயலணி அமைக்கப்பட்டு அதனூடாக பாதிக்கப்பட்ட சுமார் 7000 பேரின் கருத்துக்களை எழுத்து மூலம் பெற்று ஆராய்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts