திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி விவகாரம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ உள்ளிட்ட இருவருக்கு எதிராக மீண்டும் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய சட்டமா அதிபரால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
50 இலட்சம் பஞ்சாங்கக் கலண்டர்களை அச்சிட திவிநெகும நிதியில் 29 மில்லியன் ரூபா செலவிட்டமையால், அரசாங்க நிதியை மோசடி செய்ததாக, பஷில் ராஜபக்ஷ மற்றும் திவிநெகும கொடுப்பனவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க ஆகியோருக்கு எதிராக குற்றம்சுமத்தப்பட்டு வழக்கு விசாரணைகள் நடைபெற்று வந்தன.
இந்தநிலையில், நேற்றையதினம் குறித்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளை, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச தரப்பு சட்டத்தரணி இந்த வழக்கு தொடர்பான குற்றப் பத்திரிகையை மீளப் பெறுவதாக குறிப்பிட்டார்.
முன்வைக்கப்பட்ட குற்றப்பத்திரிகையில் சில கோளாறுகள் காணப்படுவதால், மீண்டும் இது குறித்து வழக்குத் தாக்கல் செய்ய எதிர்பார்த்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே குறித்த குற்றப் பத்திரிகையை மீளப் பெற அனுமதிக்குமாறும் அரச தரப்பு சட்டத்தரணி கோரிக்கை விடுத்தார்.
இதனை ஏற்றுக் கொண்ட மேல் நீதிமன்ற நீதிபதி பத்மினி என்.ரணவக்க இதற்கு அனுமதியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் இது தொடர்பான குற்றப் பத்திரிகையை இன்று மீளவும் தாக்கல் செய்ய சட்டமா அதிபர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்