Ad Widget

பளையில் இராட்சத வெடிகுண்டு! ஐந்து கிராம மக்கள் இடப்பெயர்வு!

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்ப்பட்ட வேம்போடுகேணி கிராம அலுவலர் பிரிவிற்கு உட்பட்ட இந்திராபுரம் குடியிருப்புப் பகுதியில் நேற்றுமுன்தினம் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த மனிதாவிமான கண்ணிவெடி அகற்றும் பிரிவினரால் 500 கிலோகிராம் கிபிர்க்குண்டு கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

நேற்று (7) பளைப் பொலிசாரால் இந்திராபுரம் பகுதியில் இருந்து சுமார் இரண்டு கிலோமிற்றர் சுற்றளவில் உள்ள கிராம மக்களை வெளியேறுமாறும் நான்கு மணிக்கு பாரிய குண்டு செயலிழக்கப்பட உள்ளதாகவும் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வயதானோர்களை வாகனங்களிலும் பொலிசார் ஏற்றி அக் கிராமத்தை விட்டு அப்புறப்படுத்தி உள்ளனர்.

பின்னர் நேற்று (7) மாலை இந்திராபுரம் பகுதிக்கு வருகைதந்த விமானப் படையினர் குறித்த கிபிர்க் குண்டினை சுமார் பத்து அடிக் குழி ஒன்றினைத் தோண்டி அதனுள் வீழ்த்தியே நான்குமணி ஒரு நிமிடத்திற்கு செயலிழக்க செய்துள்ளனர்.

செயலிழக்கச் செய்யும் பொழுது யாழ் கண்டி வீதியின் போக்குவரத்து முகமாலைப் பகுதியிலும் பளைப் பகுதியிலும் நிறுத்தப்பட்டே செயலிழக்கவைக்கும் பணி இடம்பெற்றுள்ளது.

இதன்போது அதனை அண்டிய பகுதிகளில் பாரிய சத்தத்துடனும் அதிர்வுடனும் குண்டு வெடித்ததாக அயலில் உள்ள கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதன் செயலிழப்பு பணி தொடர்பாக நேற்றயதினம் பச்சிலைப் பள்ளி பிரதேச செயலகத்திற்கு விமானப்படையினர் கடிதம் மூலமும் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts