Ad Widget

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இ.போ.சபையினர் பணிப்புறக்கணிப்பு!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வவுனியா இலங்கை போக்குவரத்து சபை சாலை ஊழியர்கள் உட்பட வடமாகாணத்தில் உள்ள ஏழு சாலைகள் இன்று (04.01) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

நிர்வாகத்திறமையற்ற வடமாகாண பிராந்திய முகாமையாளரினால் இன்றைய காலத்தில் வடபிராந்திய சாலைகள் இழுத்து மூடப்பட வேண்டிய கட்டாயத்தில் இயங்கி வருகின்றது.

ஏற்கனவே இ.போ.ச சபையினர் ஆகிய எம்மால் எழுத்து மூலம் உயர் பீடங்களுக்கு அறிவித்த பத்து குற்றச்சாட்டுகளுக்கு உரிய தீர்வு கிடைக்கப்பெறாத காரணத்தினால் வட பிராந்திய தொழிலாளர்கள் மிகுந்த அச்சத்துடனும் கவலையுடனும் தாங்கள் பணியாற்றி வருவதாகவும் இது வரை பொதுமக்களுக்கு அவர்களின் சேவைகள் பாதிக்கப்படாத வகையில் இரு போராட்டங்களை வட பிராந்திய முகாமையாளருக்கு எதிராக மேற்கொண்டிருந்தோம். இன்று வரை தீர்வுகள் கிடைக்கப்பெறவில்லை.

இதனால் வேறு வழியின்றி வடபிராந்திய தொழிலாளர்கள் தமது நன்மையினை கருதி வட பிராந்திய முகாமையாளரினை வடக்கிலிருந்து வெளியேற்றுமாறு தெரிவித்து இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக இ.போ.ச ஊழியர்கள் தெரிவித்தனர்.

இதன் காரணமாக போக்குவரத்து செய்வதில் பொது மக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்குகின்றார்கள். அத்துடன் பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள், அரச உத்தியோகத்தர்கள் பருவ கால சீட்டுடன் வந்தும் நேரத்துக்கு செல்ல முடியாத நிலையில் காத்திருந்ததையும் அவதானிக்க கூடியதாக இருந்தது.

Related Posts