Ad Widget

பல்கலைக்கழக தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பான செய்திக்குறிப்பு

யாழ் பல்கலைக்கழக ஊழியர்சங்க இணைச்செயலாளர் த.சிவரூபன் அவர்களால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையின் முழு வடிவம்..

09.03.2018
UEU/2017-2018/022

பத்திரிகைக் குறிப்பு
(09.03.2018)

இன்று கொழும்பு திறந்த பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக்குழுவின் கூட்டத்தில் பின்வரும் முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.

1. 12.03.2018 திங்கட்கிழமை முதல் வேலைநிறுத்தத்தை மேலும் தீவிரப்படுத்துவதென்றும்
2. நாடு முழுவதிலுமுள்ள போதனா வைத்தியசாலைகள் தவிர்ந்த மருத்துவபீடங்களில் வழங்கி வரும் சேவைகள் திங்கட்கிழமை முதல் முடிவுக்கு கொண்டுவரப்படுவதென்றும்
3. எதிர்வரும் 14.03.2018 புதன்கிழமை நண்பகல் முதல் பல்கலைக்கழக பீடங்களில் இடம்பெற்றுவந்த நீர்வழங்கல் பராமரிப்பு, மின்சாரப் பராமரிப்பு பணிகளும் இடைநிறுத்தப்படும் எனவும்

இக்கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைத்துப் பல்கலைக்கழக நிர்வாக உத்தியோகத்தர்கள் இன்று பிற்பகல் தொழிற்சங்கக் கூட்டுக்குழுவை சந்தித்து தாமும் போராட்டத்தில் இணைந்துகொள்வது குறித்து ஆராயவுள்ளனர்.

எந்த பல்கலைக்கழகத்திலாவது நிர்வாக உத்தியோகத்தர்கள் சங்க அங்கத்தவர்கள் எவராவது தொழிற்சங்க போராட்டத்திற்கு இடையூறு விளைவிப்பதாக புகார்கள் இருப்பின் தமக்கு தெரியப்படுத்துமாறு அனைத்து பல்கலைக்கழக நிர்வாக உத்தியோகத்தர் சங்க செயலாளர் தொழிற்சங்க கூட்டுக்குழுவின் வடக்குகிழக்கு இணைப்பு செயலாளர் திரு.பொ.தை.ய.யசோதனிடம் தெரிவித்துள்ளார்.

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் இவ்வேலை நிறுத்தத்தை ஆதரித்து வரும் நிலையில் அடுத்தவாரம் பத்திரிகையாளர் சந்திப்பொன்றை மேற்கொள்ளவுள்ளனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் வேலை நிறுத்த காலத்தில் பாதிப்புற்றிருக்கும் பல்கலைக்கழகத்திற்குரிய தபால் பட்டுவாடாவை மேற்கொள்ள முன்வந்த நிலையிலும் பதிவாளர் இதற்கு ஒத்துழைப்பு நல்கவில்லையென குற்றஞ்சாட்டுகிறது. சில முக்கியமான சட்ட நடவடிக்கைக் கடிதங்களை தாமதிக்கும் நோக்கிலேயே பதிவாளர் இவ்வாறு நடந்துகொள்கிறார் என ஊழியர் சங்கம் கருதுகிறது.

எதிர்வரும் 12.03.2018 திங்கட்கிழமை காலை 8.30 மணிக்கு சகல போதனைசாரா ஊழியர்களையும் இராமநாதன் மண்டப முன்றலில் ஒன்றுகூடுமாறு பல்கலைக்கழக ஊழியர்சங்கம் வேண்டுகிறது.

Related Posts