ஆளுநர் அலுவலகம் முன் கொட்டும் மழையில் ஆசிரியர்கள் போராட்டம்!

வடக்கு மாகாணத்தில் உள்ள ஊழல் அதிகாரிகளால் இடமாற்றச் சபையை மீறி ஆசிரிய இடமாற்றம் வழங்கப்பட்டமையை கண்டித்து இன்று (15) கொட்டும் மழையிலும் ஆளுநர் அலுவலகம் முன் இலங்கை ஆசிரியர் சங்கத்தால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தில் கலந்து கொண்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் தீபன் திலீசன் கருத்து தெரிவிக்கையில்,

வடமாகாண கல்வியை திட்டமிட்டு அழிக்கும் முயற்சியில் அரசாங்கத்துடன் இணைந்து ஊழல் கல்வி அதிகாரிகளும் ஈடுபட்டு வருகின்றனர்.

இடமாற்றச் சபையை மீறி தாங்கள் கட்சிகளுக்கு சார்பானவர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு சார்பானவர்களை யாழ்ப்பாணத்திலே தொடர்ச்சியாக தங்க வைத்துவிட்டு கஷ்டப் பிரதேசங்களில் ஆசிரிய சேவையை செய்த ஆசிரியர்களை மீண்டும் வெளிமாவட்டம் அனுப்புகிறார்கள்.

யாழ். தீவகம் மற்றும் மருதங்கேணிப் பிரதேசங்களில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் சேவை ஆற்றிய ஆசிரியர்களை தமக்கு இயைவானவர்களை யாழ்ப்பாணத்தில் தக்க வைத்துக் கொள்வதற்காக திட்டமிட்ட முறையில் சேவையின் தேவை கருதிய இடமாற்றம் என்ற போர்வையில் ஆசிரியர்கள் பழிவாங்கப்படுகின்றனர்.

ஆனால் வெளி மாவட்டமே செய்யாத பல ஆசிரியர்கள் அரசியல் கட்சியின் செல்வாக்குடனும் உயர் அதிகாரிகளின் செல்வாக்குடனும் யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தும் தங்கி இருக்க சேவையின் தேவை கருதிய இடமாற்றம் என்ற போர்வையில் முறையற்ற இடமாற்றங்களை வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஆகவே கொட்டும் மழையில் இந்த ஆசிரியர்களின் போராட்டம் ஆரம்பித்து வைக்கப்படுகின்ற நிலையில் தொடர்ச்சியாக எமது கோரிக்கைகள் உரிய முறையில் பரிசீலிக்கப்படும் வரை தொடர்ச்சியான போராட்டங்களை மேற்கொள்வோம் என தெரிவித்தார்.

Related Posts