யாழ்.பல்கலைக்கழகத்தினை சூழவுள்ள பகுதிகளில் படையினரின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று முன்தினம் முதல் பல்கலைக்கழகத்தின் பிரதான வாயிலில் படையினர் காவல் கடமையில் ஈடுபட்டு வருவதாகவும் சிலரிடம் பல்கலைக்கழகத்திற்குள்ளே என்ன நடைபெறுகிறது ஏதாவது கூட்டம் நடைபெறுகிறதா? அல்லது கூட்டமாக மாணவர்கள் என்ன உரையாடுகின்றார்கள்? போன்ற கேள்விகளை விரிவுரைகளை முடித்து வெளியே வரும் மாணவர்களிடம் படையினர் விசாரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கான தடை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியமையினைத் தொடர்ந்து இம்முறை யாழ்.பல்கலைக்கழகத்தில் மாவீரர் தினம் அனுட்டிக்கப்படலாம் என்ற அச்சத்தினாலேயே படையினரின் நடமாட்டம் பல்கலைக்கழக பகுதிகளில் தற்போதே அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது.
இதேவேளை இம்முறையும் பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது.அதாவது இம்முறை விரிவுரை நேர அட்டவணைகளில் மாற்றம் செய்யப்பட்டு குறித்த மாவீரர் வார காலப்பகுதியில் பரீட்சை விடுமுறை எல்லா பீடங்களுக்கும் ஒரேநேரத்தில் வழங்கப்பட வேண்டும் என பல்கலைக்கழக நிர்வாகம் எல்லா பீடாதிபதிகளுக்கும் அறிவித்துள்ளதாக தெரியவருகிறது.