Ad Widget

பருத்தித்துறை மீன்பிடி துறைமுக அபிவிருத்தியை செய்வதில் சீனா-இந்தியா இடையே போட்டி!!

பருத்தித்துறையில் உள்ள மீன்பிடித் துறைமுகத்தின் அபிருத்தித் திட்டத்தை பொறுப்பேற்று முன்னெடுப்பது தொடர்பில் இந்தியா – சீனா இடையே போட்டி நிலை உருவாகியுள்ளதாகத் தெரியவருகிறது.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கம் இணைந்த நிதி உதவியுடன் பருத்தித்துறை துறைமுகத் திட்டத்தை செயற்படுத்துவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. கொழும்பு துறைமுக திட்டத்துக்கு நிகராக வடக்கு மாகாணத்தில் தொழில் வாய்ப்புகளை வழங்கும் பொருட்டு பாரிய நிதி முதலீட்டில் இந்த மீன்பிடித் துறைமுகத்தை அவிவிருத்தி செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அதற்கான வரைபடமும் தயாரிக்கப்பட்டது.

இந்த துறைமுகத் திட்டம் மூலம் வடக்கு மாகாணத்தில் உள்ள 109 ஒரு கிராம சேவையாளர் பிரிவுகளில் உள்ள 15ஆயிரம் பெண் தலைமைத்துவ குடும்பங்கள், 35 ஆயிரம் வேலையற்ற இளைஞர், யுவதிகள் மற்றும் 15ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் பயனடைவர் என்ற எதிர்பார்ப்பில் திட்ட வரைபு தாயார் செய்யப்பட்டது.

4 வருடங்களுக்குள் நிறைவடையும் என்ற எதிர்பார்ப்பில் பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகத்தில் முதற்கட்ட வேலைகளுக்கான தயார்படுத்தல்கள் இடம்பெற்றன.

துறைமுக தளம் அமைப்பு மற்றும் அகழ்வு, கப்பல்கள், படகுகளை நிறுத்தும் வசதிகள், துறைமுக சுவர் அமைப்பு, வலை திருத்தம் மண்டபம், சன சமூக மண்டபம், சிற்றுண்டி சாலை, தனியார் விடுதிகள், துறைமுக முகாமையாளர் விடுதி, மேற்பார்வை கட்டடம், ஏல விற்பனை மண்டபம், சுங்கக் கட்டிடம், மருத்துவ முதலுதவி மையம், வாகனம் நிறுத்தும் பகுதி, பொது மலசல கூடம், கழிவுநீர் சுத்திகரிப்பு வசதி, எரிபொருள் வசதி, சுமைகளை இறக்கும் கட்டிடம், மின் உற்பத்தி வசதி ஆகிய வசதிகளை கொண்ட தான பாரிய துறைமுகத் திட்டமாக வரைபடம் தயாரிக்கப்பட்டது.

இந்தத் திட்டத்தை செயல்படுத்தவிடாது சிலர் கடிதப் பரிமாற்றங்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கும் அனுப்பியிருந்தனர்.

எனினும் இந்தத் திட்டத்தை செயற்படுத்துமாறு பருத்தித்துறையைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட சிவில் அமைப்புக்கள் ஒன்றிணைந்து ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்திருந்தன.

தற்போது ஆசிய அபிவிருத்தி வங்கி இந்தத் திட்டத்தை செயற்படுத்துவதற்கு தயாராக இருக்கின்ற நிலையில் இந்தியாவும் சீனாவும் ஒப்பந்த அடிப்படையில் துறைமுக அபிவிருத்தித் திட்டத்தை பொறுப்பேற்று செய்வதற்கான விருப்பங்களை வெளியிட்டுள்ளதாக கடற்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

Related Posts