Ad Widget

பருத்தித்துறை- பொன்னாலை வீதி போக்குவரத்திற்காக திறக்கப்படவுள்ளது!!

யாழ்.கோட்டைக்கு இராணுவம் செல்லாது. அடுத்த சில தினங்களில் மக்களின் காணிகள் விடுவிக்கப்படவுள்ளன.
யாழ். கோட்டைக்குள் இராணுவம் முகாம்களை அமைக்கமாட்டாதென இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினரை யாழ். கோட்டைக்கு அனுப்ப வேண்டுமென வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே சில தினங்களுக்கு முன் தெரிவித்திருந்தார்.

எனினும் அவருடைய கருத்திற்கு அமைய அனைத்து இராணுவத்தினரையும் ஒரே இடத்தில் குவிக்க முடியாது. யாழ். கோட்டை தொல்பொருள் திணைக்களத்தின் கீழ் காணப்படுவதால் எந்த விதத்திலும் இராணுவத்தினரை அங்கு அனுப்ப முடியாது என இராணுவப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் வடக்கில் படையினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படும்.

இராணுவ முகாம்களை அகற்றுவது தொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ள திட்டத்திற்கு அமைய காணி விடுவிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இதற்கமைய, எதிர்வரும் சில தினங்களில் யாழ்ப்பாணத்தில் ஒரு பகுதி காணி விடுவிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

விடுவிக்கப்படவுள்ள காணி தொடர்பில் அறியக்கிடைத்த சில தகவலின்படி, வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள பருத்தித்துறை- பொன்னாலை வீதி போக்குவரத்திற்காக திறக்கப்படவுள்ளதுடன் கட்டுவன்-மயிலிட்டி வீதி பக்கமாக உள்ள காணிகள் விடுவிக்கப்படவுள்ளன.

Related Posts