ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள ரயில்வே ஊழியர்கள் உள்பட அனைத்து அரச துறை ஊழியர்களையும் உடனடியாக பணிக்குத் திரும்புமாறு தேசிய தேர்தல் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
சம்பள முரண்பாடு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ரயில்வே ஊழியர்கள் கடந்த இரண்டு வாரமாக தொடர் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன், அரச நிர்வாக சேவை, பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் உள்ளிட்ட அரச துறை ஊழியர்களும் பல நாள்களாக தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் ரயில்வே சேவை, பல்கலைக்கழக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதித் தேர்தல் வரும் நவம்பர் 16ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பமாகிறது.
இந்த நிலையிலேயே தேர்தல் நடவடிக்கைகளை சீராக முன்னெடுக்கும் வகையில் போராட்டங்களைக் கைவிடுமாறு முதல் கட்டமாக தேசிய தேர்தல் ஆணைக்குழு கேட்டுள்ளது.