Ad Widget

பகிடிவதையால் யாழ். பல்கலைக்கழக மாணவன் வைத்தியாசாலையில் அனுமதி

யாழ். பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட மாணவர்களினால் மேற்கொள்ளப்பட்ட பகிடிவதையினால் பாதிக்கப்பட்ட முதலாம் வருட கலை பீட மாணவன் படுகாயமடைந்த நிலையில் வியாழக்கிழமை யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.பல்கலைக்கழகத்திற்குள் வைத்து குறித்த மாணவனை சிரேஸ்ட மாணவர்கள் பலர் தாக்கியுள்ளதாக குறித்த மாணவனின் பெற்றோர் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

யாழ். பல்கலைக்கழக கலை பீடத்தின் முதலாம் வருட மாணவனான தில்லைநாதன் தனராஜ் (வயது – 22) என்ற மாணவனே படுகாயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.

சிரேஸ்ட மாணவர்களின் பகிடிவதையின் காரணமாக குறித்த மாணவனின் காதின் செவிப்பறை உடைக்கப்பட்டுள்ளதுடன் கை மற்றும் கால்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ். பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts