Ad Widget

நீதி கோரி நிர்வாக கட்டடத்தொகுதியை முற்றுகையிட்ட பல்கலை மாணவர்கள்

யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாக மாணவர்கள் தமது பரீட்சைகளை நிறுத்துமாறு கோரி வவுனியா வளாக நிர்வாக கட்டடத்தொகுதியை முற்றுகையிட்டனர்.

யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தின் அனைத்து பீடங்களுக்கும் தற்போது பரீட்சை இடம்பெற்று வருகின்றது.

எனினும் வாளகத்தின் விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள் சுமார் 70 பேர் வரையில் காச்சல் மற்றும் வயிற்றோட்டத்தினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று சிலர் வீடு திரும்பிய நிலையில், சிலர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் மாணவர்களின் நிலையை கருத்திற்கொண்டு வாளாகத்தில் இடம்பெறும் பரீட்சைகளை பிற்போடுமாறு கோரி தொழில்நுட்பீட மாணவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

எனினும் பரீட்சை நிறுத்தப்படாமையினால் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு 8 மணியளவில் வவுனியா வளாகத்தின் நிர்வாக கட்டடத்தொகுதி அமைந்துள்ள பூங்கா வீதிக்கு சென்ற மாணவர்கள் நிர்வாக கட்டடத்தொகுதியை முற்றுகையிட்டு தமக்கு நீதி வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனினும் வளாகத்தின் நிர்வாக அதிகாரிகள் எவரும் இல்லாததால் வளாக முதல்வருடன் அவர்கள் தொடர்புகொண்டு தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினர்.

இந்நிலையில் குறித்த பகுதிக்கு வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சென்று மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

மாணவர்கள் தமது நிலைப்பாட்டை தெரிவித்த நிலையில், முதல்வருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிலைமையை கேட்டறிந்தார்.

இதனையடுத்து பொலிஸ் பொறுப்பதிகாரி மாணவர்களிடம், பரீட்சை நிறுத்தப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார். எனவே குறித்த இடத்தில் இருந்து செல்லுங்கள் என தெரிவித்ததற்கு அமைய மாணவர்கள் கலைந்து சென்றிருந்தனர்.

Related Posts