Ad Widget

நீதிபதி மா.இளஞ்செழியன் யாழ்ப்பாணத்தில் இருந்து மாற்றம்!! : குடா நாட்டு மக்கள் அதிர்ச்சியில்!!!

பல சர்ச்சைக்குரிய வழக்குகளுக்கு அதிரடியான தீர்ப்புக்களை வழங்கி மக்கள் மத்தியில் மிகவும் நம்பிக்கைக்குரிய நீதிபதியாக யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உள்ளார்.

இந்நிலையில் அவரை யாழ்ப்பாணத்தில் இருந்து மாற்றப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாக உள்ளன.

நீதிபதியின் மாற்றம் தொடர்பான தகவல்கள் யாழ் குடா நாட்டு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில் நீதிபதியின் இடமாற்றம் குறித்து கொழும்பு ஊடகம் ஒன்று நீதிபதி இளஞ்செழியனிடம் கேள்வி எழுப்பியுள்ளது.

அதற்கு பதிலளித்த நீதிபதி இளஞ்செழியன்,

இடமாற்றம் தொடர்பான தகவல்கள் இணையத்தில் பரவி வருகின்றன. எனினும் இதுவரையில் அவ்வாறான தகவல் எதுவும் எழுத்து மூலம் அறிவிக்கப்படவில்லை.

நான் அரசாங்க ஊழியர் என்பதனால் எந்த இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டாலும், எங்கும் செல்லத் தயார். யாழ்ப்பாணத்தில் சேவை செய்த காலப்பகுதி என் வாழ் நாளில் மறக்கவே முடியாத காலம் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நீதிபதி இளஞ்செழியன் இன்னும் சில காலம் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதியாக இருக்க வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். அவரை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டால், அதனை இரத்து செய்ய மேற்கொள்ள வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் தாம் மேற்கொள்வதாக யாழ்ப்பாண பொது மக்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் நீதிபதியாக செயற்பட்ட போது, 2015ஆம் ஆண்டு யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தில் நீதிபதி இளஞ்செழியன் மாற்றப்பட்டார்.

நீதிபதி இளஞ்செழியனின் அதிரடி தீர்ப்புகள் தமிழ் மக்களை மட்டுமன்றி ஒட்டுமொத்த இலங்கை மக்களையும் மிகவும் கவர்ந்த ஒன்றாகும்.

அண்மைக்காலமாக தென்னிலங்கை மக்கள் நீதிபதி இளஞ்செழியன் தமது பகுதிகளில் பணியாற்ற வேண்டும் என சமூக வலைத்தளங்களில் கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts