“யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த செல்வராசா ஜயந்தன் (வயது 39) என்பவர் எனது கணவர். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் அவர், இருந்தது கிடையாது. அவர் ஒரு முன்னாள் போராளி எனக் கூறுவது வதந்தி. எனது கணவர் இதைத் (துப்பாக்கிச் சூட்டை) தெரியாமல் செய்துவிட்டார்” என்று, அவருடைய மனைவி தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை (22) நல்லூர் தெற்கு வீதியில், யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில், இருவர் கைதுசெய்யப்பட்டனர்.
பிரதான சந்தேக நபர் செவ்வாய்க்கிழமை (25) காலை சரணடைந்தார். அவர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்தமை தொடர்பில் பொலிஸார் தெரிவிக்கையில்,
‘சவாலுக்காகவே துவக்கை எடுத்தேன்’
சனிக்கிழமை நல்லூருக்குப் பின் வீதியில் உள்ள எனது வீட்டில் மது அருந்திவிட்டு, அந்தச் சந்தியில் (பருத்தித்துறை வீதி , கோவில் வீதி சந்தி ) வந்து நின்றோம். அப்போது, கோவில் வீதி வழியாக மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்த பொலிஸ்காரர் ஒருவரைக் காட்டி “ உனக்குத் தைரியம் இருந்தா அவன்ர துவக்கை எடுத்துச் சுடடா பார்ப்பம்” என்று எனது மச்சான் சவால் விட்டான். அப்போது நான் பொலிஸாரின் துவக்கை எடுக்கேக்க அது தெரியாமல் சுடுட்டு விட்டது.
அதன் பின்னர் பிஸ்டலைக் காட்டி வீதியால் வந்தவரது ஸ்கூட்டரைப் பறித்து. ஸ்கூட்டரில், ஆடியபாதம் வீதி ஊடாக கல்வியன் காட்டுப் பகுதிக்குச் சென்று அங்கிருந்து அரியாலைக்குச் சென்றேன்.
அரியாலை பேச்சி அம்மன் கோயிலுக்குப் பின்னால் ஸ்கூட்டரைப் போட்டு விட்டு திருநகர் பகுதியில் உள்ள பெரியம்மா வீட்டுக்குச் சென்றேன்.
அங்கு பெரியம்மாவிடம், போதையில் பொலிஸ் ஒருவருக்கு அடித்து விட்டேன். பொலிஸ்
என்னைத் தேடுகிறது எனச் சொல்லி. பெரியம்மா வீட்டிலேயே உடையை மாற்றிவிட்டு ஓட்டுமடம் பகுதியில் உள்ள கோம்பயன்மணல் சுடலையில் தான் அன்றைய இரவைக் கழித்தேன்.
மறுநாள் பகல் நாவந்துறையில் உள்ள உறவினர் வீட்டில் நின்றேன். அன்றிரவு கொட்டடியில் உள்ள மாமாவின்
வீட்டுக்குச் சென்றேன். நல்லூரில் நடந்த சம்பவத்தை மாமா அறிந்து வைத்திருக்க வேண்டும். ஏனெனில், என்னை அங்கு கண்டதும் மாமா உடனடயாக எனது அப்பாவுக்கு அலைபேசி அழைப்பை ஏற்படுத்தி நான் வந்ததைக் கூறினார். மாமா என்னைப்பொலிஸில் சரணடையுமாறு கூறினார்.
அதன்படி மாமாவுடன் வந்து பொலிஸில் சரணடைந்தேன் என பொலிஸாருக்கு வாக்குமூலம் அளித்துள்ளார் எனப் பொலிஸ் நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சந்தேக நபரின் உடைகள் மீட்பு
அதன் பின்னர் செவ்வாய்க்கிழமை குறித்த நபரிடம் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளப்பட்ட பின்னர், திருநகரில் உள்ள சந்தேகநபரின் பெரியம்மா வீட்டுக்குப் பொலிஸ் வாகனத்தில் கறுப்புத் துணியால் மூடிய நிலையில் சந்தேகநபர் அழைத்துச் செல்லப்பட்டார்.
துப்பாக்கிச் சூடு நடத்தும்போது அணிந்திருந்த உடைகள் உள்ளிட்ட சில பொருட்களை அங்கு பொலிஸார் மீட்டனர்.
8ஆம் திகதி வரையில் விளக்கமறியல்
குறித்த சந்தேகநபர் யாழ். பொலிஸாரினால் யாழ். நீதவானின் உத்தியோகபூர்வ இல்லத்தில், செவ்வாய்க்கிழமை முற்படுத்தப்பட்டார். சந்தேக நபரை எதிர்வரும் 8ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.