Ad Widget

நல்லூர் ஆலயத்திற்கு வருகை தருவோருக்கு அசௌகரியங்களை ஏற்படுத்துவோர் மீது நடவடிக்கை!!

நல்லூர் கந்தசுவாமி ஆலய சூழலில் அதிசத்தத்தை எழுப்பும் கோர்ன்களை ஊதி சென்ற இளைஞர் குழுவொன்றை காவல்துறையினர் பிடித்து, கோர்ன்களை பறிமுதல் செய்து, கடுமையாக எச்சரித்து விடுவித்துள்ளனர்.

நல்லூர் ஆலய வருடாந்திர மகோற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. ஆலய திருவிழாவிற்கு வருகை தருவோருக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தம் விதமாக சிலர் நடந்து கொள்வது குறித்து பல தரப்பினரும் தமது அதிருப்தியை வெளிப்படுத்தி கடும் விசனமும் தெரிவித்து, உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.

ஆலய மகோற்சவ திருவிழாக்களின் விசேட திருவிழாக்கள் அடுத்த வரும் நாட்களில் நடைபெறவுள்ள நிலையில் அதிகளவானோர் ஆலயத்திற்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதனால் ஆலய சூழலில் விரும்பத்தகாத செயல்கள், குற்றசெயல்கள், ஆலயத்திற்கு வருகை தருவோருக்கு இடையூறு ஏற்படுத்தல் போன்றவற்றை தடுக்கும் நோக்குடன் பெருமாளவான காவல்துறையினர் சிவில் உடைகளில் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். அவர்கள் ஆலய சூழலில் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

அந்நிலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை மாலை உற்சவத்தின் போது, ஆலயத்திற்கு வந்திருந்தோர் மத்தியில் அதிக சத்தத்தை எழும்பும், கோர்ன்களை ஊதியவாறு சென்ற இளைஞர் குழுவொன்றை சிவில் உடையில் நின்ற காவல்துறையினர் மடக்கி பிடித்து, விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் அவர்களிடம் இருந்த கோர்ன்களை பறிமுதல் செய்து, அவர்களை கடுமையாக எச்சரித்து விடுத்தனர்.

அதேவேளையில் மதுபோதையில் யாசகர்கள் சிலர் ஆலய சூழலில் யாசகம் பெறுவதாக காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் யாசகர்கள் சிலரையும் சோதனையிட்டுள்ளனர்.

அதன்போது யாசகர் ஒருவரின் உடமையில் இருந்து , தொடுதிரை கைபேசி (ஸ்மார்ட் போன்) ஒன்றினை மீட்டிருந்தனர். கைபேசி தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பின்னர், கைபேசியை கையளித்தனர்.

Related Posts