Ad Widget

த.தே.ம முன்னணியின் தேர்தல் பரப்புரைகளை முடக்குவதற்கு அரசாங்கம் சதி

அகில இலங்கை தமிழ்காங்கிரஸ்,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியால் முன்னெடுக்கப்படும் தேர்தல் பரப்புரைகளை அரசாங்கம் திட்டமிட்டு முடக்கி வருகின்றது என்று அக் கட்சியின் ஊடகப் போச்சாளரும் வேட்பாளருமான வி.மணிவண்ணன் குற்றம் சுமத்தியுள்ளார்.

பொய் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவாளர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டும், தடுத்து வைத்தும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவதாகவும் அவர் மேலும் சுட்டிக் காட்டியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் பரப்புரைகளை முடக்குவதற்கு அரசாங்கம் சில சதி முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒரு அங்கமான தேர்தல் பரப்புரைகளில் ஈடுபடும் ஆதரவாளர்களை இலக்கு வைத்துள்ள பொலிஸார் அவர்களுக்கு பல்வேறு தெந்தரவுகளை கொடுத்து வருகின்றனர். குறிப்பாக வியாழக்கிழமை பூநகரி பகுதிக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் பிரச்சார துண்டுப்பிரசுரங்களை வாகனம் ஒன்றில் கொண்டு சென்ற கட்சி உறுப்பினர் ஒருவர் பூநகரிப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மீது இரவு 11 மணிக்கு வீதியால் சென்று கொண்டிருந்த மக்களிடத்தில் தேர்தல் துண்டுப் பிரசுரத்தினை விநியோகித்ததான பொய் குற்றச்சாட்டினை போட்டு வெள்ளிக்கிழமை கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்தியுள்ளனர். இருப்பினும் அவருக்கு பிணை அனுமதியினை நீதவான் வழங்கியிருந்தார்.இதனைத் தொடர்ந்து நேற்று(24 ) வெள்ளிக்கிழமை மாலை யாழ்.நீராவியடிப் பகுதியில் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த மற்றுமொரு கட்சி உறுப்பினர் எந்தவிதமான காரணங்களும் கூறப்படாமல் பொலிஸாரினால் நீண்ட நேரம் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு தடுத்து வைக்கப்பட்ட அவரை பொலிஸார் கடுமையாக அச்சுறுத்திய பின்னர் விடுவித்துள்ளனர்.தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் பரப்புரைகளை திட்டமிட்டு தடுக்கும் முயற்சிகளில் பொலிஸார் தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.எவ்வாறான தடை வந்தாலும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் நடவடிக்கைகள் தொடந்து முன்னெடுக்கப்படும்.சட்டத்தினை மீறி நாங்கள் எந்த பிரச்சார நடவடிக்கைகளையும் மேற் கொள்ளவில்லை இனிவரும் காலங்களில் சட்டதிட்டங்களை மீறி நாம் பிரச்சர நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts