Ad Widget

த.தே.கூ மலையகத்திலும் அரசியல் செய்யலாம் – இராதாகிருஷ்ணன் எம்.பி

இலங்கை ஒரு ஜனநாயக நாடு. தமிழ் தேசியக் கூட்டமைப்பு மலையகத்திலும் வந்து அரசியல் செய்வதற்கு அவர்களுக்கு முழு உரிமையும் உண்டு. அவர்களது வருகையினால் மலையகத்தில் நல்லது நடக்கும் என்றால் அதனை வரவேற்கின்றோம் என தாவரவியல் பூங்காக்கள் பொது பொழுதுபோக்கு அலுவல்கள் பிரதி அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

55(8)

மண்சரிவினால் பாதிக்கப்பட்ட கொஸ்லந்தை மீரியபெத்தை பகுதிக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் விஜயம் மேற்கொண்டமை தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மலையகத்துக்கு தீண்டத்தகாதவர்கள் அல்ல. எமக்கும் அவர்களுக்கும் இடையில் ஒரு சிறு இடைவெளி ஏற்பட்டுவிட்டது. அது மீண்டும் கட்டியெழுப்பப்படுகின்றதென்றால் அதனை நாம் வரவேற்க வேண்டும்.

எமது நாட்டில் சுனாமி ஏற்பட்ட பொழுது எந்த உணர்வுடன் மலையக மக்கள் வடக்குக்கும் ஏனைய பகுதிகளுக்கும் சென்று மனிதாபிமான உதவிகளை செய்தார்களோ அதே மனிதாபிமான ரீதியில்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு கொஸ்லந்தை மீரிய பெத்தை பகுதிக்கு விஜயம் செய்தார்கள்.

இதில் எந்தவிதமான அரசியல் நோக்கமும் அவர்களிடம் இருக்கவில்லை என்பதை என்னால் தெளிவாக கூற முடியும்.

தமிழத் தேசிய கூட்டமைப்பு கொஸ்லந்தை மீரியபெத்தைக்கு விஜயம் செய்தபோது நானும் அவர்களுடன் கலந்துகொண்டேன். அவர்கள் என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இதில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்கள்.

அவர்களுக்கு அரசியல் ரீதியான அல்லது இந்த விஜயத்தில் வேறு எண்ணங்கள் இருந்தால் என்னையோ அல்லது ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனையோ அழைக்காமல் சென்றிருக்கலாம்.

இதேவேளை, இவ்விஜயத்தின்போது எந்தவிதமான அரசியலையும் அவர்கள் பேசவில்லை.

எமது மறைந்த தலைவர் சௌமிய மூர்த்தி தொண்டமான் வடக்குக்கு தலைமைதாங்கி இருக்கின்றார். அவர் உயிருடன் இருக்கும் பொழுது வடக்கு மக்களுக்காக குரல் எழுப்பி இருக்கின்றார். எனவே அவ்வாறான ஒரு நெருங்கிய உறவு அவர்களுடன் எமக்கு இருந்தது.

அதுபோல எமது மலையக மக்கள் முன்னணியின் மறைந்த தலைவர் பெரியசாமி சந்திரசேகரன் அமைச்சராக இருந்துகொண்டும் வட மாகாண மக்களுடன் நல்ல ஒரு உறவை பேணிவந்தார்.

எனவே இனியாவது நாம் அனைவரும் ஒற்றுமையாக செயற்பட முன்வரவேண்டும். இன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எவ்வாறு அவர்களுடைய பிரச்சினைகளை சர்வதேசத்துக்கு கொண்டு சென்றுள்ளதோ அதேபோல நாமும் எமது பிரச்சினைகளை சர்வதேசத்துக்கு கொண்டு செல்லவேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் இந்த விஜயத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே ஏற்றுக் கொண்டுள்ளநிலையில் மற்றவர்கள் அலட்டிக் கொள்வது ஏனென்று புரியவில்லை எனவும் அவரது செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts