Ad Widget

தேர்தலுக்காக அபிவிருத்தி நிதியிலிருந்து ரூ.100 மில்லியன் மோசடி: சுரேஸ் எம்.பி

SURESHவட மாகாணத்தின் அபிவிருத்திக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியிலிருந்து 100 மில்லியன் ரூபா, வட மாகாணசபைத் தேர்தலுக்கு பயன்படுத்துவதெற்கென மோசடி செய்யப்பட்டுள்ளது’ என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

அபிவிருத்திக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை எவ்வாறு தேர்தலுக்காகப் பயன்படுத்த முடியும் என்று கேள்வி எழுப்பிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், இது தொடர்பில் தேர்தல் ஆணையாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றும் வலியுறுத்தினார்.

நேற்று செவ்வாய்கிழமை யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே சுரேஸ் எம்.பி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘வடக்கின் அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட மேற்படி நிதியின் மூலம் 1,500 சைக்கிள்கள் மற்றும் 25 ஆயிரம் கூரைத் தகடுகள் வழங்கப்படவிருந்ததாக அறியக்கிடைத்துள்ளது’ என்றும் அத்துடன் ‘இந்த தேர்தலில் அரசாங்கத் தரப்பிலிருந்து போட்டியிடும் வேட்பாளர்களுக்கான நேர்முகத் தேர்வும், இராணுவத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றதாகவும்’ சுரேஸ் எம்.பி குறிப்பிட்டார்.

‘தேர்தலில் எவ்வாறு குழப்பத்தை எற்படுத்தி வெற்றி பெறலாம் என்ற நிலையில் அரசு செயற்படுகின்றது.

இவ்வாறான அபிவிருத்தி நிதி மோசடி தொடர்பில் உரிய நடவடிக்கை எடுத்து இது தொடர்பில் பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்’ என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Related Posts