திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானத்தில் ஜனாதிபதி மைத்திரி!

திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானத்திற்கு விஜயம் செய்து சமய நிகழ்வுகள் கலந்துகொண்டு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார்.

திருகோணமலை மாவட்டத்தில் பேண்தகு அபிவிருத்தியை ஏற்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் பணிப்புரையின் பேரில் ‘சிரிசர பிவிசும’ மாவட்ட அபிவிருத்தி செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

இதில் பங்கேற்பதற்காக திருகோணமலை சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தருடன் திருகோணமலை பத்திரகாளி அம்பாள் கோவிலுக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டார்.

இந்த நிகழ்வில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

கடந்த அரசாங்கங்கள் தங்கள் இருப்பை தக்க வைத்துக்கொள்ளவே தமிழ் பிரதிநிதிகளை பயன்படுத்திக்கொண்டனர் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில், “1947 முதல் ஆட்சியமைத்த அனைத்து அரசாங்கங்களும் தங்களது இருப்பை தக்க வைத்துக்கொள்வதற்காகவே வடக்கு, கிழக்கு மக்களின் பிரதிநிதிகளை பயன்படுத்திக் கொண்டார்கள்.

வடக்கு, கிழக்கு மக்களின் அபிவிருத்தி பணிகள் தொடர்பில் அனைத்து அரசாங்கங்களும் குறைந்தளவு கவனத்தையே செலுத்தியுள்ளன.

வடக்கு, கிழக்கு இனப் பிரச்சினைக்கு பல விடயங்கள் அடிப்படையாக இருந்தபோதிலும் தகுந்த அரசியல் தலைமை அப்பிரதேசங்களில் பிரதிபலிக்காதது முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

ஒரு மாகாணத்தை, அபிவிருத்தியை நோக்கி கொண்டு செல்வதற்கு அம்மாகாணத்தில் குறைந்தபட்சம் ஓரு அமைச்சரவை அமைச்சுப் பதவியாவது வழங்கப்பட வேண்டும். நாட்டை பிளவுப்படுத்தாத அதிகார பகிர்வு எனப்படும் எண்ணக்கரு அப்போதே யதார்த்தமாகும்.

யுத்தம் நிலவிய பிரதேசங்களில் மக்களிடையே நிலவும் அச்சத்தை தீர்க்கும் முகமாக இன, மத ரீதியான நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கு அரசு பாரிய பங்காற்றியுள்ளது. அதனூடாக மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.” என கூறினார்.

Related Posts