Ad Widget

தமிழ் மக்கள் பேரவையில் ஒருங்கிணைந்து செயற்படத் தீர்மானம்: சுரேஸ்

தமிழ் மக்கள் பேரவையில் இருக்கின்ற கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்கள் என சகலரும் ஒருங்கிணைந்து செயற்படத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பேரவையின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. கூட்டத்தின் முடிவில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் மக்கள் பேரவையில் இருந்து எங்களுடைய கட்சியையும் புளொட் கட்சியையும் வெளியேற்ற வேண்டுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விடுத்த கோரிக்கைக்கமைய இரண்டு கட்சிகளிடமும் விளக்கங்கள் கோரப்பட்டிருந்தன.

அதற்கமைய இரண்டு கட்சிகளும் தங்களது விளக்கத்தை எழுத்து மூலமாக வழங்கியிருந்தன. அது தொடர்பில் ஆராயப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.

அதாவது பேரவைக்குள் ஏற்பட்டிருந்த பிரச்சனைகள் இன்றைய இக் கூட்டத்துடன் முடிவிற்கு வர வேண்டுமென்ற அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.

அத்தோடு அனைவரும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டுமென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது” என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts