தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்துவதற்கு வடக்கு- கிழக்கு இணைப்பு அவசியமாக உள்ளது என வட. மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள துருக்கி நாட்டின் இலங்கைக்கான தூதுவர் துங்கா ஒஸ்காவிற்கும், வட.மாகாண முதலமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது.
இதன்போது வடக்கு- கிழக்கு இணைப்பு தொடர்பில் துருக்கி தூதுவர் வினவியிருந்த நிலையில் அதற்கு பதிலளிக்கும் வகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவித்த முதலமைச்சர், “முன்னைய காலத்தில் வடக்கு- கிழக்கில் 10 வீதமான பெரும்பான்மை இனத்தவர்களே காணப்பட்டனர். ஆனால் தற்போது இங்கு 31 வீதமான பெரும்பான்மை மக்கள் குடியேற்றப்பட்டுள்ளனர்.
காலா காலமாக தமிழ் பேசும் மக்களின் இடமாக விளங்கிய வடக்கு- கிழக்கில் தற்போது சிங்கள மேலாதிக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வடக்கையும் கிழக்கையும் பிரித்து மக்களிடையே குழப்பத்தினையும் கலவரத்தினையும் ஏற்படுத்தி, இங்கிருந்து தமிழ் மக்களை வெளியேற்றி முற்று முழுதாக பெரும்பான்மையினரின் ஆதிக்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தோன்றுகிறது.
எனவே எமது பாதுகாப்பின் நிமித்தம் வடக்கையும் கிழக்கையும் இணைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது” என்றும் குறிப்பிட்டார்.