Ad Widget

தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுக்கொடுக்க யாரும் தாயாரக இல்லை: கஜேந்திரகுமார்

மக்கள் போராட்டத்தினால் தமது உரிமைகளை பெற்று வருகின்றார்களே தவிர, வேறு எவரும் பெற்றுக்கொடுக்கத் தயாராக இல்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி-இரணைதீவு பூர்விக மண்ணில் மீள்குடியேற்றம் செய்யுமாறு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செ.கஜேந்திரன் ஆகியோர் அங்கு நேரில் சென்று மக்களுடன் கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது, ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த கஜேந்திரகுமார் இவ்வாறு தெரிவித்தார், தமது பூர்வீக மண்ணில் குடியேறுவதற்காக மக்கள் இன்று வீதியில் இறங்கி போராடுகின்றனர். இவ்வாறு மக்கள் போராட்டத்தினால் தமது உரிமைகளை பெற்று வருகின்றார்களே தவிர, வேறு எவரும் பெற்றுக்கொடுக்கத் தயாராக இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் மக்கள் வீதியில் இரவு பகலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றய தினம் நாட்டின் பிரதமரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தனது வீட்டிற்கு அழைத்து சென்று உறவினர்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.

இருவரும் ஒரே வானூர்தியில் பயணித்துள்ளனர். இவ்வாறு மிக நெருக்கமான உறவை வைத்திருக்கும் அவர்கள் மக்களிற்காக எதையும் பேசியதாக தெரியவில்லை. கடந்த சில மாதங்களிற்கு முன்னர் இவ்வாறு மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் தனது மகளின் பிறந்த நாளிற்கு ஜனாதிபதியை அழைத்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.

இவ்வாறு மக்களை வீதிகளிற்கு கொண்டுவந்த அரச தலைவர்களுடன் நெருக்கமாக உறவு வைத்திருப்பவர்கள், வீதிகளில் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை என்றும் சிந்தித்தது கிடையாத எனவும் கூறியுள்ளார். இந்த உண்மையை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் எனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார்.

வெறுமனே மக்களின் வாக்குகளிற்காக அவர்களின் வீடுகளிற்கு செல்பவர்கள், பின்னர் மக்களை மறந்து தமது நெருக்கமான உறவை அரச தலைவர்களுடன் கொண்டுள்ளனர்.

உண்மையை மக்கள் உணர்ந்து எதிர்வரும் காலங்களில் செயற்பட வேண்டும் என்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

Related Posts