தமிழ் தலைவர்களின் தூரநோக்கற்ற சிந்தனைகளும், இறுமாப்புத் தன்மையும், அகந்தையுமே தொடர்ச்சியாக அரசியல் பின்னடைவுகளை சந்திக்க காரணம் என வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “30 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்ற யுத்தத்தின் காரணமாக எமது பிரதேசத்தில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் கல்வி நிலையில் பின்தள்ளப்பட்டனர். அவர்களின் குடும்பங்களும் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகினர்.
வீடு, வாசல் சொத்துக்களை இழந்து தொழில் முயற்சிகளின்றி அல்லற்பட்டுக் கொண்டிருந்த சூழ்நிலையில் அவர்களுக்கான விரைந்த உதவிகள் நேரடியான உறவுகளின் மூலமாகவும் புலம்பெயர் அமைப்புக்களின் ஊடாகவும் வழங்கப்பட்டன. அந்த உதவிகள் அவர்களின் அன்றாட வாழ்க்கைச் செலவுகளை ஈடுகொடுக்கக்கூடிய அளவில்தான் அமைந்துள்ளன.
அத்துடன், இவ்வாறான உதவிகள் நீண்டகாலத்திற்கு தொடர்ந்து வழங்கப்படமுடியாதவை. இவ்வாறான உதவிகளை வெளிநாடுகளில் இருந்து எமது புலம்பெயர் உறவுகள் தொடர்ந்து வழங்கி வருகின்ற போதும் இங்கிருக்கும் அதன் பயனாளிகள் சுயமாக பொருள் தேடும் தொழில் முயற்சியை முழுமையாகக் கைவிட்டு எந்த நேரமும் மற்றையவர்களின் கைகளை எதிர்பார்க்கின்ற ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இது வருந்தத்தக்க செயல்.
இலங்கை சுதந்திரம் பெற்ற தினத்தில் இருந்து இன்று வரை எமது தமிழ்த் தலைவர்களின் தூரநோக்கற்ற சிந்தனைகளும், இறுமாப்புத் தன்மையும், அகந்தையும், சமூக வேறுபாட்டுக் கொள்கைகளும் மற்றும் இன்னோரன்ன காரணிகளே நாம் தொடர்ச்சியாக அரசியல் பின்னடைவுகளை சந்திப்பதற்கான ஏதுக்களாக இருந்து வந்துள்ளதை நாம் காண்கின்றோம்.
இந்த நிலையில் நாம் எமது இருப்புக்களை உறுதி செய்து எம் மீது திணிக்கப்படுகின்ற அரசியல் அழுத்தங்களிற்கு முகம்கொடுத்து எமது மக்களைப் பாதுகாக்க வேண்டுமாயின் அதற்குரிய கல்வி நிலையை நாம் பெற்றுக் கொள்ள முனைப்புடன் செயலாற்ற வேண்டும்“ என தெரிவித்துள்ளார்.